Saturday, January 10, 2009

சத்யா குடிச்சிருக்கியா?’

 

'ம்ம்...கொஞ்சம் தான் மது. ஒரு ரெண்டு சிப். அவ்ளோதான்'

 

மதுவிற்கு கோபம் தலைக்கேறியது. திருமணத்திற்கு முன்பே மதுவிடம் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது, "நட்சத்திர ஹோட்டலில் வேலையில் இருந்தாலும் சத்யா குடிப்பதில்லை, புகைப்பதில்லை" என்று.

 

மதுவின் கண்களை நேர் கொண்டு காண முடியவில்லை சத்யாவிற்கு.

 

'இல்லை மது... இன்னைக்கு ஒரு க்ளையண்ட் என்ன குடிக்கச் சொல்லி ரொம்ப வற்புறுத்தினார். நான் இப்போலாம் குடிப்பதில்லைனு எவ்வளவவோ சொல்லிப் பார்த்தேன்... அவர் கேட்கலை. வேற வழி இல்லாம கொஞ்சம் குடிச்சேன் அவ்ளோதான்'.

 

மதுவிற்கு கோபம் தணிந்ததாய்த் தெரியவில்லை. சத்யா தொடர்ந்து,

 

'புரிஞ்சிக்கோ மது.... நான் வேணும்னு குடிக்கல. இனிமே கண்டிப்பா குடிக்க மாட்டேன்....இது சத்தியம்'.

 

திருமணமான இந்த ஏழு மாதங்களில் சத்யா இந்த அளவு கலங்கி மது பார்த்ததில்லை.

 

சத்யா... நீ என்ன சமாதானம் சொன்னாலும் நீ செஞ்சது தப்புதான். நல்ல வேளை இன்னைக்கு அம்மா ஊர்ல இல்லை. மருமகள் குடிச்சிட்டு வீட்டுக்கு வர்ரது அவங்களுக்குத் தெரிஞ்சா எவ்வளவு கஷ்டப்படுவாங்க. இனிமேலாவது கவனமா இருந்துக்கோ'”

 

தலை அசைத்தவாறு உடை மாற்றச் சென்றாள் சத்யா என்ற சத்யப்பிரியா. அவளைப் புதிராய்ப் பார்த்தான் மது என்ற மது சூதனன்.

 

என்னை நீங்குவது

உன் உரிமையெனில்

என்னுள் உனை

நீக்கமறச் செய்வது

என் இருத்தலின் ஆதாரம்.

கனவுகளை நான்

தொலைத்துவிட்டதால்

நினைவுகளை விட்டு நான்

தொலைய நினைக்கிறேன்.

தும்மலுக்கு நன்றி.

தும்மலின் முடிவில்

அன்று நான்

அனிச்சையாய் கூறிய 'அம்மா',

நினைவூட்டியது எனக்கு

மறுநாள் அவளுடைய

பத்தாம் ஆண்டு திதி என்று.

 

தும்மிய பின் மெளனம் காக்கும்

என் பையனிடம்

''அம்மா' 'அப்பா' சொல்லிப் பழகு'

என்கிறேன் சில நாட்களாய்.

தும்மலுக்கு நன்றி.

Friday, January 2, 2009

கூசாமல் எழுதுகிறேன்

தொல்காப்பியம் தொட்டதில்லை

பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்

பள்ளிச் செய்யுளோடு சரி

கணக்குப் போட்டால் பத்தைத் தாண்டாது

நானறிந்த குறட்பா எண்ணிக்கை

பாரதியும் சரி அவன் தாசனும் சரி

நான்கைந்து வரிகள் அதிகபட்சம்

பாவகை தமிழில் பலவிருந்தும்

தேர்ச்சி ஒன்றிலும் இல்லை

இருப்பினும்...

கூசாமல் எழுதுகிறேன்

'புதுக்கவிதை' என்ற போர்வையில்

அதை வலைப்பதிவும் செய்கிறேன்

யாரென்ன செய்வரென்ற தைரியத்தில்.

மாயத்திரை

திறந்திருந்தால் உள்ளதையும்

மூடியிருந்தால் உள்ளத்தையும்

திரையிடுகிறது மூளையில்

இமையெனும் மாயத்திரை!

தங்கத் தட்டும் வெள்ளித் தட்டும்

மாறி மாறி மிதக்கின்றது

குளத்தில் சூரியனும் சந்திரனும்।

நீ விட்டெறிந்த கல்லால்
கலங்கியது முகம்
தண்ணீரில் என் பிம்பம்.

கனவுக் கோட்டை

முதல் மாத சம்பளத்தில்
கட்டிய கனவுக் கோட்டை
நொருங்கியது முழுவதுமாய்.
பேருந்தில் நானும்
என் கிழிந்த பையும்.

குற்றவுணர்ச்சி

ஒவ்வொரு முறையும்
மொட்டை மாடியிலிருந்து எக்கி
மாங்காய் பறித்து ருசித்தவுடன்
குற்றவுணர்ச்சி தொண்டையில் சிக்குகிறது
கிளை என் வீட்டிலும்
வேர் பக்கத்து வீட்டிலும்!

குறைத்துக் கொள்வோம்

நம் முத்தச் சத்தத்தைக்
குறைத்துக் கொள்வோம்
காமத்துப் பாலில் மேலும் சில பாக்கள் சேர்க்க
கல்லறையிலிருந்து உயிர்த்தெழப் போகிறான் வள்ளுவன்
நேற்றே வாத்ஸ்யாயனர் எழுத்தாணியோடு
ஓலை தேடி அலைந்ததாய் கேள்வி!