Saturday, May 30, 2009

வலைப்பூ ஆசை

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.... (http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html)

அந்த வெள்ளி இரவில், எனக்கு ஒரு விசித்திர மின்னஞ்சல் வந்திருந்தது.
அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால், நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்து விட்டு சுமார் 11.30 மணி அளவில் எனது லேப்-டாப் திறந்து போது அதைக் கண்டேன்.

வழக்கமான ஏதோ ஒரு குப்பை (spam) என்றே முதலில் அதை நினைத்தேன. அனுப்புநர் முகவரி சற்றே வித்தியாசமாய் இருக்க அதைப் படிக்க ஆரம்பித்தேன். அந்த அஞ்சல் என்னை எதையும் வாங்கச் சொல்லவில்லை, எவ்வாறு இணையத்தில் பொருள் ஈட்டலாம் என்ற வகுப்பும் இல்லை; எனது வங்கி எண்ணையும் கேட்கவில்லை. ஒரு ஆர்வத்தில் rajblogs@hell-heaven.net என்ற அந்த முகவரிக்கு வெறும் 'வணக்கம்' மட்டும் சொல்லி ஒரு பதில் அஞ்சல் செய்தேன். அப்படியொரு முகவரியே இல்லையென்று எனக்கு பதில் வந்துவிட்டது.

பொதுவாகவே 'இதை உங்கள் பத்து நண்பர்களுக்கு அனுப்பினால் உங்கள் வாழ்வு செழிக்கும் இல்லையேல் இரத்தம் கக்கி சாவீர்கள்' என்கிற ரீதியில் வரும் மின்னஞ்சல்களை நான் மதிப்பதில்ல. ஆனால் இந்த முறை ஏனோ அவ்வாறு இருக்க முடியவில்லை.

அந்த மின்னஞ்சலில் இருந்தது இதுவே:

“ வணக்கம் அன்பரே! எனது பெயர் ராஜசேகரன்.31 வயதான நான் திருமண முறிவிற்குப் பின் தனியாகவே உள்ளேன். உங்களைப் போலவே தினமும் ஒரு மணி நேரமாயினும் இணையத்தில் உலா போகாவிட்டால் எனக்கு அன்றைய தினம் முடியாது. எனது முக்கியமான பொழுதுபோக்கே வலைப்பதிவுகளைப் (blogs) படிப்பதுதான்.

டைப் அடிக்க தெரிந்தவனெலாம் வலைப்பூவும் இணையதளமும் ஆரம்பிக்க, எனக்கும் அந்த ஆசை துளிர் விட்டது. சிறுவயதிலிருந்தே ஓரளவு கதைகள் எழுத வருமாதலால் அதைக் கொண்டே எனது வலைப்பதிவை அலங்கரிக்க நினைத்தேன். கதையின் கருவை முடிவு செய்து விட்டு எழுத ஆரம்பிக்கும் போது ஊசி குத்தியது போல் ஒரு வலி என் மார்பில் ஆரம்பித்தது. பொறுத்துக் கொண்டு என் லேப்-டாப்பில் டைப் செய்ய ஆரம்பித்தேன். ஒரு வரி தான்... அதற்குள் கண்கள் இருட்ட ஆரம்பித்து சுயநினைவை இழக்க ஆரம்பித்தேன்....

மறு நாள் இரவு போலீசார் வந்து எனது பிரேதத்தைக் கொண்டு சென்றனர். கடைசி வரை என்னால் என் எழுத்துக்களை இணையத்தில் இணைக்க முடியாமலேயே போய்விட்டது. நீங்கள் எனது கதையை முடித்து இணையத்தில் சேர்ப்பீர்களா? எனது ஆசையை நிறைவேற்றுவீர்களா?

நான் எழுதிய அந்த ஒரு வரி இது தான்: ....”

அந்த மின்னஞ்சலில் கடைசியாக அந்த ராஜ் ஆரம்பித்த கதையின் ஆரம்ப வரியும், 'அன்புடன் ராஜ்' என்றும் இருந்தது.

காசா பணமா ஒரு கதை தானே, முயற்சி செய்து பார்க்கலாம். நன்றாக வந்தால் என் வலைப்பூவில் பதிவிடலாம் இல்லையேல் நல்ல பிள்ளையாக அதை அழித்து விட்டு வேறு வேலை பார்க்கப் போகலாம் என்றெண்ணி, அந்த ஓர் வரியிலிருந்து ஏதேனும் கதை எழுத வாய்ப்புள்ளதா என்று சிந்திக்க ஆரம்பித்தேன். சுமார் 20 நிமிட யோசித்தலில் ஒரு கரு பிடிபட்டது. தூங்கும் முன்னரே எழுதி முடித்துவிடலாம் என்று முடிவு செய்து மணியைப் பார்த்தேன். சரியாக 12.01.

சுவற்றில் சாய்ந்து கொண்டு டைப் செய்ய ஆரம்பித்தேன. முதல் வரியை அடிக்கும் போதே... ஊசி குத்தியது போல் ஒரு வலி என் மார்பில் ஆரம்பித்தது. சமாளித்துக் கொண்டு அடுத்த வரி அடிக்க முயன்றேன்... ஆனால்...கண்கள் இருட்ட ஆரம்பித்து சுயநினைவை மெல்ல இழக்க ஆரம்பித்தேன்.....மறு நாள் காலை போலீசார் வந்து எனது பிரேதத்தைக் கொண்டு சென்றனர்.

ராஜ் ஆசையை நிறைவேற்றலாம் என்ற என் ஆசையும் நிராசையாய்ப் போனது. கடைசி வரை அந்தக் கதையை முடித்து இணையத்தில் இணைக்க முடியாமலேயே போய்விட்டதே!

ப்ளீஸ்...உங்களில் யாரேனும் இதை முயற்சி செய்து எங்கள் ஆசையை நிறைவேற்றுவீர்களா? ஆங்...சொல்ல மறந்து விட்டேனே, அந்தக் கதையின் முதல் வரி இதுதான்:

"அந்த வெள்ளி இரவில், எனக்கு ஒரு விசித்திர மின்னஞ்சல் வந்திருந்தது."

அன்புடன்
சுரேஷ்

Monday, May 25, 2009

ஒரு வரி, இரு வரிக் கதைகள்

சில ஆண்டுகளுக்கு முன்னர் சுஜாதா அவர்கள் 'ஆனந்த விகடனில்' தமிழில் ஓரிரு வரிகளில் கதை சொல்லும் முறை பற்றி குறிப்பிட்டிருந்தார். அவை ஒரு முழு நீளக் கதை போல் உணர்வுகளை, காட்சிகளை வெளிப்படுத்தாவிடினும் ஒரு சிறு தாக்கத்தையேனும் ஏற்படுத்தக் கூடியது.அப்போது வாசகர்களுக்குப் போட்டிகள் கூட நடத்தினார்

 திகில், நகைச்சுவை போன்ற சில தலைப்புகளில் உதாரணங்கள் தந்திருந்தார். அவர் அது வரை படித்ததில் சிறந்தது என்று குறிப்பிடிருந்தது,

உலகின் கடைசி மனிதன் அறையினுள் இருக்க, கதவு தட்டப்பட்டது  

 

தலைப்பைத் தவிர்த்து, ஒன்று அல்லது இரு வரிகளில் கதை சொல்ல நானும் முயற்சி செய்தேன். அவற்றுள் சில இங்கே...:)

 

தலைப்பு: மனநல மருத்துவரின் குழப்பம்

'டாக்டர், இவன் தான் நான் கூட்டி வந்த பேஷண்ட்'.

'ஐயோ! பொய் சொல்றான் டாக்டர்.'

 

தலைப்பு: தீபாவளி

முன் வாசலில் பட்டாசு ராக்கெட் கொழுத்தி விட்டு வீட்டினுள் நுழைந்தோம்.

கொல்லைபுறம் வைக்கோல் போரில் பற்றி எரியும் தீயின் வெப்பம் தாங்காமல் அலறிக் கொண்டிருந்தது எங்கள் பசு.

 

தலைப்பு: 'நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்

 இறந்து போன தன் காதலி தந்த பிறந்த நாள் வாழ்த்து அட்டையைக் கலக்கத்துடன் பார்த்தார், மறு நாள் தன் நூறாவது பிறந்த நாள் விழா கொண்டாடப் போகும் பாலு தாத்தா.

  

ஓர் உயிரைக் கொடுத்து,  ஓர் உயிரின் அழிவிற்கு வித்திட்டான் லட்சுமியின் எய்ட்ஸ் கணவன். (தலைப்பின்றி)

Thursday, May 21, 2009

கவிதைத் திருட்டு

நான் கவிதை எழுதுவேனென
நண்பர்கள் சொன்னதை நம்பாமல்
என்னிடமே உன் ஐயம் பகர்ந்தாய்.
உனக்காக ஒரு கவிதை கேட்டாய்.

கால் மணி அவகாசம் கேட்டு
திரும்பி வந்து நான் தந்த
வண்ணத்தாள் சுற்றிய அப்பொருளைப்
புரியாமல் நீ பார்த்த ஒவ்வொரு நொடியும்
உன் ஒவ்வொரு கண் சிமிட்டலும்
ஓர் கவிதை வரியை
என்னுள் விதைத்துச் சென்றது.

விதைத்ததைப் பின்னர் வளர்க்கலாமென்று
நீ பிரிப்பதைப் பார்க்கலானேன்.

பிரித்த பின்னும் ஓரிரு நொடிகள்
புரியாமல் எனைப் பார்த்தாய்.
புரிந்த பின் மண் பார்த்தாய்.

உன் கையிலுள்ள பொருள் காட்டி
மெதுவாக உன் காதுகளில் சொன்னேன்
'இது தான் என் கவிதைப் புத்தகம்.
இதிலிருந்து சுட்டவையே
என் அனைத்துக் கவிதைகளும்'.

வெட்கம் கொஞ்சம் வீசிவிட்டு
உனக்கேதும் அதில் கவிதை தெரிகிறதா என்பதுபோல்
மீண்டும் பார்த்தாய்
நான் தந்த முகம் பார்க்கும் கண்ணாடியை!

Sunday, May 17, 2009

பரிகாசப் புன்னகை

எங்களூர் மேகமெலாம்
வருடத்தில் ஓரிரு முறை தான்
வியர்வை வழிய உழைக்கும்.
மீதி நாட்களில்
எங்கள் வியர்வை வழிவதை
மேல் நின்று பார்த்துப்
பரிகாசப் புன்னகை செய்யும்!

Thursday, May 7, 2009

முற்றும்.

நீ தந்து விட்டுப் போன

திருமண பத்திரிகையின்

அதிர்ச்சியில் இருந்து

சற்று மீட்சி பெற

வார இதழ்களைப் புரட்டினேன்.

எல்லா தொடர்கதைகளிலும்

'முற்றும்' கண்டேன்.

பிரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டு
இரண்டு திங்கள் ஆகவில்லை.
கட்டிய மாவிலை தோரணம் கூட
முழுதாய் உதிரவில்லை.
அதற்குள் பிரிந்துணர்வு ஒப்பந்தம் வேண்டி
நீதி மன்றம் சென்றதேன்?

Friday, May 1, 2009

கண்ணாடி

உன்னைப் பின்னமர்த்தி
என் இருசக்கர வாகனத்தில் செல்கையில்,
ஒரு பக்க கண்ணாடி பின்வரும்
வண்டிகள் நோக்கியும்
மற்றொரு கண்ணாடி பின் சாய்ந்து வரும்
உன்னை நோக்கியும் வைத்திருப்பேன்.
அப்போது மட்டும்
கண்ணாடியில் பொறிக்க பட்ட வாசகம்
மிகவும் அர்த்தப்படுவதாய்த் தோன்றும்!
'Objects in the mirror are closer than they appear'.

[காட்சிக் கவிதையாய் இதைக் காண்பித்த 'பொய் சொல்லப் போறோம்' படப்பாடலுக்கு நன்றி]