Monday, November 23, 2009

சில நேரங்களில்...

சில நேரங்களில்...
எங்கோ ஊற்றெடுத்த
யாருக்கோ சொந்தமான
என் கோபம்
உன் மீது திரும்பலாம்.

சில நேரங்களில்...
உன் கனவுகள் பட்டியலிடும்
உன் கண்கள் ஏங்கும்
பொருட்கள் யாவும்
வாங்கும் சக்தி
நம் வரவுக்கு
இல்லாமல் போகலாம்.

சில நேரங்களில்...
காய்ச்சலில் சரிந்து
களையற்ற முகத்துடன்
மூன்று நாள் தாடியுடன்
நான் படுக்கையில் கிடக்கலாம்.

சில நேரங்களில்...
சமூகத்தால் விதைக்கப்பட்டு
என்னுள்ளே அடைக்கப்பட்ட
ஆணாதிக்க எண்ணம் எப்பொழுதேனும்
வெளிவந்து உன்னைக் கீறலாம்.

இந்தத் தருணங்களைக் கடந்தும்
என் மீதான உன் காதல்
திருமணத்திற்குப் பின்
துளியேனும் குறையாது
தீர்க்கமாய் நிலைக்குமாயின்..

இந்தப் பூமியில் சொர்க்கமீனுவேன்.

Tuesday, October 27, 2009

நட்புப் பாலில் காதல் துளி....

நம் நட்புப் பாலில்

காதல் துளி விழுந்துவிட்டது.

என் காதலை 
உன்னிடம் சொல்வதால் 
நான் உன்னிடம் 
அந்நியப்பட்டுப் போகலாம்,
நீ மறுக்கும் பட்சத்தில். 

இந்த அபாயம் தெரிந்தே 
பறித்துச் செல்கிறேன் 
இன்றலர்ந்த ரோஜாவொன்றை. 

நம் நட்பிற்கு
இன்று மரணம் நிச்சயம். 
என் காதலை 
நீ ஏற்றாலும் 
ஏற்காவிடினும்!

ஏற்றால் உன் கூந்தலிலும் 
இல்லையெனின்
நம் நட்பின் கல்லறையிலும்
இந்த ரோஜா ஏறிக்கொள்ளும்.

Monday, August 31, 2009

ஒரு வரி, இரு வரிக் கதைகள் (2)

முன்பொருமுறை முயன்றது போல் ஓரிரு வரிகளில் கதை சொல்ல முயன்று பார்த்தேன் மறுபடியும். 'Science Fiction' கதைகளே எனக்குப் பெரும்பாலும் தோன்றுகிறது :-( . 


1.தலைப்பு: கி.பி. 3292

ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

"இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு - ' நீராவி எஞ்சின்' " 

2. தலைப்பு: பூமியை நெருங்கும் ஒரு விண்கலத்தினுள்....

"இந்த கிரக வாசிகளைப் பார், வித்தியாசமாய் இருக்கிறார்கள்! ஒரேயொரு சிறிய தலையுடன், இரண்டே கைகளுடன் நம் உள்ளங்கை அளவில் இருக்கிறார்கள். "

3. தலைப்பு: அவன்-அவள் மாற்றம்

மகனின் பதினாலாவது பிறந்த நாளுக்கு தந்தை ஆசையாய் இரண்டு சட்டைகள் வாங்கி வந்தார். மகனோ கண்ணாடி முன் தனிமையில் அக்காவின் உடைகளை அணிந்தபடி.

4. தலைப்பு: இயந்திரம் + மனிதன் 

உடம்பில் வெடிமருந்துகள் கட்டிக்கொண்டு கூட்டத்தில் சந்தேகம் ஏற்படாதவாறு நுழைந்தான் அவன். கணினியில் அவனுக்கு கட்டளைகள் பிறப்பித்தவாறு அந்த இயக்கத்தின் 'அறிவியல் பிரிவு' வல்லுனர்கள்.  

ட்டு வீடுகளிருந்தும் எப்போதும்
நடுத்தெரு வெயில் மழை தான்
கட்-அவுட்டில் சிரிக்கும் தலைவருக்கு.

***

றங்கிய பின்னும் இறங்க மறுக்கிறது
என்னுடைய கண்கள்.
பேருந்தினுள் நீ.

***

ன் இதயத்திற்கான விலையை
அறியக் கண்டேன்
உன் புன்னகையில்.

***

நிலவில் வடை சுடும் பாட்டி
யாருக்காக இவ்வளவு காலம்
சுட்டுக்கொண்டே இருக்கிறாள்?

***

ந்தப்புறம் பாட்டி
நிலவின்
மறுபுறம்?

Friday, August 28, 2009

வியாபாரம்

'ஹலோ...'

'ஹலோ ரகுராமன்!'

இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.

'ஆனா...என்னோட பேரு எப்படி உனக்குத் தெரியும்?'

'நீங்க வந்ததுமே உங்க முகத்த படம் பிடிச்சேன். அதை வெச்சு இணையத்துல நுழைஞ்சு 'உலக மக்கள் தகவல்கள்' தளத்த ஹேக் (Hack) செஞ்சு உங்க பேர கண்டுபிடிச்சேன்'

'இவ்வளவு சீக்கிரமாவா? '

'ம்ம்...நம்ப முடியலையா?'

'குட்... உன்ன மாதிரி சிலர பாத்திருக்கிறேன்... ஆனா நீ ரொம்ப புத்திசாலியா இருக்குற'

'பாராட்டுக்கு மிக்க நன்றி ரகுராமன்'

'சரி நேரா விஷயத்துக்கு வரேன்... உன்ன இப்ப நான் எதுக்காக வாங்கிச் செல்லனும்? நறுக்குன்னு பதில் சொல்லு பாக்கலாம்'

'மூணு காரணங்கள் இருக்கு ரகுராமன்'

'ஓ... சரி வரிசையா சொல்லு'

'முதலாவது, என்னால பங்குச் சந்தைல அடுத்த நாள் நடக்கிற விஷயங்களை 75% சதவீதம் துல்லியமா முதல் நாளே கணிக்க முடியும்... அதனால உங்களால நிறைய சம்பாதிக்க முடியும். இரண்டாவது, இப்ப உங்க வீட்ல இருக்குற மத்த எல்லா இயந்திர மனிதர்களை விட என்னால திறமையா வீட்டு வேலைகள் செய்ய முடியும்'

'மூணாவது விஷயம்?'

'நீங்க வந்த உடன நாம ரெண்டு பேரும் கைகுலுக்கும் போது உங்களோட உள்ளங்கை ரேகைய படம்பிடுச்சு பதிவுசெஞ்சு வெச்சிருக்கேன். இவ்வளவு நேரம் நீங்க பேசினதுல இருந்து உங்க குரலையும் பதிவு செஞ்சிருகேன். உங்களுக்கே தெரியும்.. இந்த இரண்டையும் வெச்சே உங்களோட வங்கிக் கணக்கு உள்ள என்னால நுழைய முடியும். நீங்க இப்ப என்ன வாங்கலைன்னா அடுத்து வரப் போற என்னோட எஜமான் கிட்ட என்னோட விசுவாசத்த காமிப்பேன்'

மெல்லிய புன்முறுவல் செய்தபின் தொடர்ந்தது...

'இந்தக் காரணங்கள் போதுமா?'

ரகுராமன் திகைத்துப் போனான்.


[கி.பி. 2035-இல் 'இயந்திர மனிதன் விற்பனைக் கடை'யினுள் நடந்த?!(நடக்கவிருக்கிற) ஒரு உரையாடல் ]

Friday, August 21, 2009

பிப்ரவரி 14

ந்தப் பெருநகரக் கடையில்
வாழ்த்து அட்டை பிரிவில்
அவனுக்குப் பணி நான்கு வருடங்களாய்.  

ஒவ்வொரு காதலர் தினத்திற்கும்
வாழ்த்து அட்டைகளும்
வரும் காதலர் எண்ணிக்கையும்
கூடிக்கொண்டே இருந்தது.
அவனது ஏக்கத்தைப் போல.  

இருப்பினும்...
ஒவ்வொரு காதலர் தினத்திற்கும்
மறவாது ஒரு வாழ்த்து அட்டை
பத்திரப்படுத்தி வைக்கிறான்.
என்றோ வரப் போகும்
தன் காதலிக்காக.  

ஏன்?

யாரோ என்னைக் கன்னத்தில் தட்டி எழுப்பினார்கள். கொஞ்சம் சிரமப்பட்டுதான் கண் திறந்துப் பார்த்தேன். டாக்டர் மற்றும் இரண்டு நர்ஸ்கள் நின்றிருந்தனர். வயிற்றிலிருந்துக் கசிந்த வலி எனக்கு அறுவை சிகிச்சை முடிந்துவிட்டதென்பதை என் மூளைக்குச் சொன்னது. இருந்தும் கேட்டேன்...

"டாக்டர்...சர்ஜரி முடிஞ்சிருச்சா?"


என் நா அன்று என் கட்டுபாட்டில் இல்லை. இப்படித் தெளிவாகக் கேட்க அன்று முடியவில்லை ஆயினும், நான் கேட்க நினைத்தது இது தான்.

டாக்டர்க்கு நான் கேட்டதுப் புரிந்தோ அல்லது யூகித்தோ சரியான பதிலே சொன்னார்.

"முடிஞ்சிருச்சுப்பா..எதுவும்  பிரச்சனை இல்லை. மூணு நாலு நாள் இங்க ஐ.சி.யூல இருக்க வேண்டி வரும். அப்புறம் உன்ன தனி ரூம்க்கு மாத்தலாம்".

"மணி என்ன டாக்டர்?"

"ஆறு ஆகுதுப்பா... ஒரு மணி நேரத்துல முடிச்சாச்சு"

"டாக்டர்..வலிக்குது...அம்மா அப்பா எங்க டாக்டர்?"

நர்ஸிடம் எனக்கு ஏற்கனவே ஏறிக் கொண்டிருந்த ட்ரிப்ஸ் பாட்டிலில் ஏதோ ஒரு மருந்தைக் கலக்கச் சொன்னார். இன்னொருவரை விட்டு என் பெற்றோரை அழைத்து வரச் செய்தார். என் அம்மாவும் அப்பாவும் என் கட்டில் அருகே வந்து ஏதோ பேசினர். பேசுகிறார்கள் என்று மட்டுமே தெரிய, வார்த்தைகளை உள் வாங்க முடியவில்லை. கண்கள் இருட்ட...தூங்கினேனா மயங்கினேனா என்று எனக்குத் தெரியவில்லை.


நான் மீண்டும் முழித்துப் பார்த்த போது என் அருகில் யாருமில்லை. என் கட்டில் சுற்றிலும் இருட்டு மட்டுமே. எங்கோயிருந்து கொஞ்சம் வெளிச்சமும், இருவரின் பேச்சுக் குரலும் கேட்டது. பதட்டத்தில் எழ முயற்சி செய்தேன். சம்மட்டியால் யாரோ வயிற்றில் அடித்தது போல் ஒரு வலி...

'ஆ.....' என்று கத்தியே விட்டேன். அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறேன் என்ற பிரஞ்ஞை அப்பொழுதுதான் வந்தது.

ஒரு நர்ஸ் ஓடி வந்தார்...

'என்னப்பா...என்ன ஆச்சு?'

'மணி என்ன சிஸ்டர்?' . 

அவர் என்னை வித்தியாசமாய்ப் பார்த்தார். மணி கேட்கவா இப்படிக் கத்தினான் என்று நினைத்திருப்பார்.

'நாலு ஆகுதுப்பா...' . சிறுது இடைவேளி விட்டு அவரே தொடர்ந்தார் 'காலைல 4 மணி'.

அவர் காலை என்று சேர்த்துச் சொன்னதற்குக் காரணம் உண்டு. அந்த கட்டிலில் இருந்த படியே ஒருவரால் அது இரவா பகலா என்று நிச்சயம் யூகிக்க முடியாது. சூரிய ஒளி சிறிதுமின்றி முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறை அது. என் கட்டிலின் வலது புறமும் பின் புறமும் சுவர் தான். இடது புறம் சுமார் எட்டு அடி உயரத்தில் அலுமினியத்தால் ஆன ஒரு தடுப்பு. மிச்சமிருந்த அந்த நாலாவது புறத்திலும் அடர் பச்சை நிறத்திலான ஒரு துணி வைத்துத் தற்காலிகமாய் ஒரு சுவர் எழுப்பியிருந்தனர். டாக்டரோ நர்ஸோ என்னைப் பார்க்க வரும் போது மட்டும் அந்தச் சுவர் நகர்த்தப் படும்.

எனக்கு அடிவயிற்றின் வலியை விட இன்னும் இங்கு மூன்று நாட்கள் இருக்க வேண்டி உள்ளதே என்ற கவலை தான் பெரும் வலியாய் இருந்தது. உடம்பு சரியில்லாமல் சமயத்தில் வீட்டில் படுக்க நேரிடும் போது, சோர்வினைப் போக்க தொலைக்காட்சியும் புத்தகங்களும் பெரிதும் உதவி செய்யும். ஆனால், இங்கு ஐ.சி.யூ.விலோ புத்தகங்களுக்கு அனுமதி இல்லை. செல்போனுக்கும் தடா. கிருமிகள் பயமாம். முழித்திருக்கும் நேரமே கொடுமையாய் இருக்கும். ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரு முறை பெற்றோர்கள் வந்துப் பார்க்க அனுமதி. அதுவும் ஐந்து நிமிடங்கள் தான்.

முதல் நாள் பெரும்பாலும் தூக்கத்திலேயே கழிந்தது. அதற்கான பிரத்யேக மருந்து ஏதும் தந்தார்களா என்றுத் தெரியவில்லை. முழித்திருந்த நேரத்தில் நான் கிரகித்த விஷயங்கள் இவை தான். அந்தப் பெரிய அறையில் சில மருத்துவ உபகரணங்கள் போக மேலும் ஐந்து கட்டில்கள் போடப்படிருந்தன - மேலும் ஐந்து குட்டிச் சிறைச்சாலைகள்! அவற்றில் என் இடது புற கட்டில் மட்டுமே வெறுமையாய். எந்நேரமும் இரு நர்ஸ்கள் பணியில் இருந்தனர். நோயாளிகள் யாரேனும் லேசாக முனங்கினால் கூட என்னவென்று போய்ப் பார்ப்பார்கள்.

மாத்திரை கொடுத்து ஏறிக் கொண்டிருந்த டிரிப்ஸை நர்ஸ் நிறுத்தி, 'குட் நைட்' சொல்லிச் சென்றபோது வெற்றிகரமாய் முதல் நாள் முடிந்தது எனக்குத் தெரிந்தது.

தூங்க ஆரம்பித்த நேரம் ஏதோ சத்தம் கேட்டு முழுதாய் விழித்தேன். புதிதாய் யாரோ ஒரு நோயாளி வந்திருக்கிறார் போலும். சீஃப் டாக்டர் குரலுடன் மற்றொரு டாக்டர் மற்றும் மூன்று நர்ஸ்களின் குரல்களும் கேட்டன. எதோ பதட்டமான விஷயம் என்பது மட்டும் அப்போது எனக்குப் புரிந்தது.

'என்ன சிஸ்டர் நீங்களே இப்படிப் பண்ணலாமா? ' , சீஃப் டாக்டர் சற்றே கோபத்துடன் கேட்டார்.

போதையில் இருப்பவர் உளறுவது போல் ஒரு பெண்ணின் குரல் கேட்டது. அப்பெண்ணின் குரல் கொஞ்சம் சத்தமாகவே ஒலித்தது. நிச்சயம் என்னைப் போல் ஐ.சி.யூ.விலுள்ள மற்ற நான்கு நோயாளிகளும் விழித்திருப்பர்.

பேச்சுக் குரல்களை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிதேன். அக்குரல்கள் எனக்குத் தெரிவித்த விஷயங்கள் இவை தான்:

அந்தப் புது நோயாளியின் பெயர் சாந்தி. இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை இந்த மருத்துவமனையில் தான் நர்சாக வேலை செய்திருக்கிறார். என்னக் காரணத்தினாலோ வேலையை விட்டுவிட்டு மற்றொரு மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார். திருமணம் ஆகவில்லை. உடன் அவர் தாய் மட்டுமே.

இப்போது தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். எதோ ஒரு மருந்து உட்கொண்டிருக்கிறார். அது மாத்திரையா அல்லது ஏதேனும் ஊசியா என்றுக் கூடத் தெரியவில்லை. அதைத் தெரிந்துக் கொள்ளும் முயற்சியில் தான் மற்றவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இப்போது பாதி மயக்கத்தில் இருக்கிறார்.

டாக்டர் ஏற்கனவே அவர் தாயுடன் இன்னொரு நர்சை அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அனுப்பியுள்ளார், ஏதேனும் மாத்திரைத் தாள், ஊசி மருந்துப் புட்டி கிடைக்கிறதா என்று. அந்தப் பெண்ணின் தாய் இன்னும் வரவில்லை போலும்.

'சிஸ்டர்! ப்ளீஸ்... கோ- ஆப்பரேட் பண்ணுங்க... என்ன மருந்து எடுத்துக்கிட்டீங்க?'

'சொல்ல மாட்டேன்... மாட்டேன்....மாட்டேன். என்ன சாக விடுங்க'

இன்னும் சுயநினைவுடன் தான் இருக்கிறார். ஆனால் வாய் குளறுகிறது.

'சிஸ்டர்... உங்க அம்மாவப் பாருங்க. அவங்கள கஷ்டபடுத்திட்டு நீங்க போகனுமா? என்ன மருந்துன்னு சொன்னாதான் ட்ரீட்மென்ட் கொடுக்க வசதியா இருக்கும்..உங்களுக்குத் தெரியாததா? '

'என்ன சாக விடுங்க...ப்ளீஸ்..கெஞ்சிக் கேட்டுக்கறேன்...என்ன விட்டுடுங்க ' அந்தப் பெண் அழ ஆரம்பித்தார்.

நேரம் ஆக ஆக அந்தப் பெண்ணின் உளறல் சத்தம் அதிகமானது. பேய் பிடித்ததுப் போல் கத்தினார். எல்லோரையும் மரியாதைக் குறைவாகப் பேச ஆரம்பித்தார். யாரையும் அவர் அருகில் கூட நெருங்க விடாது கூப்பாடு போட ஆரம்பித்தார்.

மற்ற நோயாளிகள் எல்லாம் நர்சுகளைக் கூப்பிட்டு என்னவென்று கேட்டனர். சீஃப் டாக்டர் ஒவ்வொரு படுக்கைக்கும் போய் ஒன்றுமில்லையென்றும் அவர்களைத் தூங்கச் சொல்லியும் சமாதானப் படுத்தினார்.

என்னுடைய திரைச் சீலையை விலக்கி எட்டிப் பார்த்தார். கொட்ட கொட்ட முழித்திருக்கும் என்னை ஆச்சர்யத்துடன் பார்த்தார்.எந்தக் குரலும் என்னிடமிருந்து வராததால், தூங்கிக் கொண்டிருப்பேன் என்றெண்ணி இருப்பார் போல.

'என்னப்பா தூங்கலியா? '

'இல்ல டாக்டர்... தூங்கினேன். இப்பதான்...'

'என்ன அந்த அம்மா போடற சத்தத்துல பயந்துட்டியா?'

'இல்...இல்லை டாக்டர்... பயப்படல...'

அவர் என் கண்களையே உற்றுப் பார்த்தார். நிச்சயமாக நான் சொன்னதை அவர் நம்பவில்லை. நானே தொடர்ந்தேன்..

'ஆனா ஒரு மாதிரியா இருக்கு டாக்டர்...'

நான் பதட்டத்தில் இருந்தது உண்மை. அந்த ஏ.சி குளிரிலும் வியர்த்துதான் போயிருந்தேன். அவர் என்னருகில் வந்து ஸ்டதஸ்கோப் உபயத்தில் வழக்கம் போல் இழுத்து மூச்சு விட வைத்து என்னமோ கூர்ந்துக் கவனித்தார். பி.பி அளவையும், நாடித் துடிப்பையும் சோதித்தார்.

என்னையே சில விநாடிகள் பார்த்தவாறு இருந்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை ...

'இப்ப உன்ன ரூம்க்கு மாத்திடறேன்... இன்னும் ஒரு அரை மணி நேரத்துல ரூம ரெடி பண்ணிட்டு உன்ன கூட்டிட்டு போகச் சொல்றேன்.'

ஏன் மாற்றச் சொன்னார் என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அந்தப் பெண் தான் காரணம். இப்பொது டாக்டரின் செல்போன் ஒலித்தது. 'ஹலோ' சொல்லிக் கொண்டே என் திரைச் சீலையை மீண்டும் மூடிவிட்டு மறைந்தார். அநேகமாக இந்தப் பெண்ணின் வீட்டிலிருந்து தான் அழைப்பு வந்திருக்கும்.

அந்தப் பெண்ணின் சத்தம் இப்போது வெகுவாகக் குறைந்திருந்தது. களைத்திருப்பார் போல. டாக்டர் இப்போது மற்றவர்களிடம் ஏதோ வேகமாய் சொல்லிக் கொண்டிருந்தார். மற்றவர்கள் பரபரப்பாயினர். என் இடப்புறக் கட்டிலில் அந்தப் பெண் கிடத்தப்படும் சத்தம் கேட்டது. அந்தப் பெண்ணிடம் இருந்து எந்தச் சத்தமும் இல்லை. மயக்க ஊசியோ அல்லது வேறேதும் மருந்தோ தந்திருக்கலாம்.

என் சிந்தனை இதிலிருந்து விலகி இப்போது வெளியில் செல்வதிலயே லயித்திருந்தது. எனக்கு என் வலி, அந்தப் பெண்ணின் நினைவுகள் அனைத்தையும் மீறி நான் இந்தச் சிறைச்சாலையிலிருந்து இன்னும் சிறுது நேரத்தில் விடுதலை ஆகப் போகிறேன் என்பதே என் எண்ணத்தில் பிரதானமாய் இருந்தது.

சிறுது நேரத்தில்...

கட்டிலில் இருந்த என்னை, என் தந்தையும் ஒரு நர்சும் மெதுவாக சக்கர நாற்காலிக்கு இடம் மாற்றினார்கள். என்னை இந்தச் சிறையிலிருந்து மீட்ட அந்தப் பெண்ணைப் பார்க்க ஏனோ எனக்கு ஆவலாய் இருந்தது. என் தந்தை மெதுவாகத் தள்ள ஆரம்பிக்க, என் பார்வை முழுதும் அந்தப் பக்கத்துக் கட்டில் நோக்கியே இருந்தது. ஆனால் பச்சைத் திரைச்சீலையால் மூடப்பட்டிருந்த அந்த கட்டிலின் காலைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை.

முதல் தளத்திலிருந்த ஐ.ஸி.யூ.விலிருந்து வெளி வந்தேன். குளிரூட்டப்பட்ட ஏ.சி அறையிலிருந்து வெளி வந்தவுடன் வெக்கைக் காற்று உடலைத் தாக்கினாலும், சுதந்திரக் காற்று மனதிற்கு இதமாய் இருந்தது. எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை இரண்டாவது தளத்திலிருந்தது. ஒரு இரண்டு நிமிட சக்கர நாற்காலிப் பயணத்தில் என் அறை வந்துச் சேர்ந்தேன்.

அடுத்த வந்த நாட்கள் அந்த அறையில் தான். இங்கும் கட்டில்தானாயினும், என்னால் புத்தகம் படிக்க முடிந்தது, நண்பர்கள் உறவினர்களுடன் பேச முடிந்தது ஆறுதலாய் இருந்தது. சமயத்தில் தத்தித் தத்தி சன்னல் பக்கம் வந்து சாலையையும் பார்க்க முடிந்தது. ஆனாலும் அந்தப் பக்கத்துக் கட்டில் பெண்ணின் நினைவு அவ்வபோது வந்துப் போகும்.

அந்தப் பெண் குணமடைந்து மூன்று நாட்களில் டிச்சார்ஜ் ஆகிச் சென்று விட்டார் என்று மற்றொரு நர்ஸ் மூலம் தெரிய வந்தது

தையல் பிரிக்கப்பட்டு, ஏழாவது நாள் வீட்டுக்குச் செல்ல அனுமதி தந்தார் முதன்மை மருத்துவர். பத்து நாட்கள் கழித்து வந்துப் பார்க்குமாறு சொல்லி அனுப்பினார்.

எப்போதும் பார்த்த வீடாயினும் அன்று நுழையும் போது ஏதோ சொர்க்கத்தில் நுழைவது போலிருந்தது. நடப்பதில் பெரிய சிரமம் இல்லையெனினும் மருத்துவரின் அறிவுரைப்படி, பெரும்பாலும் கட்டிலிலேயேக் கழித்தேன். தொலைக்காட்சி எனக்கு உற்றத் துணைவனாய் இருந்தது.

த்து நாட்கள் கழித்து என் அம்மாவுடன் மீண்டும் மருத்துவமனை சென்றேன்.

வெளி நோயாளி பிரிவில் டோக்கன் வாங்கிக் காத்திருந்தோம். அவ்வழியே சென்ற பரிச்சயமான ஒரு நர்ஸ் என்னைப் பார்த்துப் புன்னைகைத்து என் பக்கம் வந்தார்.

'எப்படிப்பா இருக்கிற?'

'இப்ப ஒண்ணும் பிரச்னை இல்லை சிஸ்டர்'

என் அம்மா பக்கம் திருப்பிய அவர்,

'என்னம்மா வீட்ல என்ன செய்யறான்? இங்க இருக்கும் போது போரடிக்குது போரடிக்குதுனு சொல்லிட்டே இருப்பானே!'

'அங்க முழு நேரமும் டி-வி தான். சில சமயம் ஏதாவது படிச்சிட்டு இருப்பான். சிஸ்டர்! அந்த சாந்தி சிஸ்டர் எப்படி இருக்காங்க?'

நான் கேட்க நினைத்துத் தயங்கிய கேள்வியை என் அம்மா கேட்டே விட்டார்.

"அவங்க இப்ப இல்லம்மா.. இங்க அட்மிட் ஆன மூணாவது நாளே அவங்க டிச்சார்ஜ் ஆகி போய்ட்டாங்க... போகும் போது கூட நல்ல சிரிச்ச முகமாதான் போனாங்க... அப்படிப் பண்ணினதுக்கு ரொம்ப வருத்தப் பட்டாங்க என்கிட்ட. இனிமே இந்த மாதிரி பண்ணக் கூடாதுன்னு சத்தியம் வாங்கினேன்.ப்ச்...ஆனா என்ன நடந்ததோ தெரியல... என்ன காரணம்னு அவங்க அம்மாக்குக் கூட தெரியல. மறுபடியும் நாலு நாள் முன்னாடி ஒரு அட்டெம்ப்ட் பண்ணி இருக்கிறாங்க. இங்க தான் கொண்டு வந்தாங்க... ஆன வரும் போதே உயிர் இல்ல. " ... 

அவர் சொல்லி முடிக்கும் போதே, அவர் கண்களில் நீர் கோர்த்திருந்தது. என் கண்களும் கலங்கியிருந்தன; இதுவரை முகம் பார்க்காத, எந்தச் சம்பந்தமும் இல்லாத அந்தப் பெண்ணுக்காக.

அவர் ஏன் சாவை மீண்டும் மீண்டும் தேடிப் போனார்?

Tuesday, August 18, 2009

பிணம்

ழி நெடுக பூக்களும்
சேருமிடம் சேர்ந்ததும் 
கல்லும் மண்ணும்
தூவப் படுகிறது.
'அவர்' 'அது' வானதால்.

ரு வருடமாய் 
பெய்யாத மழை 
நீ ஊருக்குச் சென்ற
மூன்று நாட்களும் பெய்தது. 

ஆசையாய் வளர்த்த 
ரோஜாச் செடிக்கு 
நீரூற்ற ஆள் இல்லையென 
அரை மனதுடன் நீ சென்றது
அந்த வானத்திற்குத்
தெரிந்தது போலும் 

வார விடுமுறையில்
டவுன் வந்து
சினிமா பார்த்து
வெளியே வரும் போது
தினக்கூலி கண்ணனின்
பையில் பத்து ரூபாய் மட்டுமே.

நான்கு ரூபாய் பேருந்துப் பயணத்தைத் தவிர்த்து
ஒரு மணி நேரம் வெயிலில் நடந்து
வழியில் விசாரித்த நண்பனிடம்
உணவருந்தியதாய்ப் புழுகி
ஊர் வந்ததும்
பத்து ரூபாய்க்கு
டாப்-அப் செய்து
அவசரமாய்
நண்பர்களுக்கு ஃபார்வர்ட் செய்தான்.
நமீதா பற்றிய கிசுகிசுவை .

Monday, August 17, 2009

ரு வேலையும் இன்றி
சும்மாவே சுற்றிக் கொண்டிருக்கின்றன
கடிகார முட்கள்

***ரு மணி நேரத்திற்கொருமுறை
இடம் பொருள் ஏவலறியாது முத்தப் பரிமாற்றம்
கடிகாரத்துக்குள்.

***
வர் ஒருமுறை மிதித்ததில்
ஐம்பது பேர் தள்ளாடிப் போனார்கள்
பேருந்து ஓட்டுனர் அடித்த பிரேக்.

Friday, August 14, 2009


சூரியன் மறையும்போது
விடியல் ஆரம்பித்தது
கால்சென்டர் பணியில்

***

வரோ எங்கோ வைக்கும் தீயில்
இவள் வீட்டு அடுப்பு எரிகிறது.
பீடிகள் உற்பத்தி இவள் விரல்களில்.


***
காலையில் இமைகள் திறந்தும்
ஒளி புகவில்லை உள்ளே
காற்றில் எதையோ தேடியபடியே கைகள்.

***

முகமூடி கொள்ளையருக்குள் குழப்பம் 
கூட்டாளி யார் யாரென்று
Swine flu பீதியால் :-) 

ர் தூறல் வேளையில் தான்
உன் காதலை என்னுடன் பகிர்ந்தாய்

மற்றொரு மழை நாளில்
உன் பிரிதலை எனக்குச் சொன்னாய்.

இரண்டுத் தருணங்களிலுமே
என் சார்பாக அந்த வானமும்
நெடுங்கண்ணீர் சிந்தியமையால்,
என் கண்கள்
கண்ணீர் கசித்ததை
நீ அறிந்திருக்க நியாயமில்லை.

Monday, August 10, 2009

ரயில் பயணம்

ரண்டு மாதம் முன்னரே
முன் பதிவு செய்து
குட்டித் தலையனையும்
சின்னப் போர்வையும்
மறவாமல் கொண்டு வந்து
என் படுக்கைக்குச் சென்றேன்.
அருகில்...
குறட்டையில் சுவாசிக்கும் இருவர்
சிவராத்திரி கச்சேரி நடத்தினர்
ஆர்ப்பாட்டமாய்...விடியவிடிய.

பேருந்து நிலைய வாசலுக்கே
ஓடிச் சென்று
பேருந்தைத் துரத்தி
கூட்டத்தில் இடி பட்டு
ஒரு செருப்புப் பிய்ந்து
படியில் மிதி பட்டு ஏறி
ஒருவனின் கெட்ட வார்த்தை
அர்ச்சனைக் கேட்டு
மஞ்சள் பை இருக்கையில் வீசி
இடம்பிடித்து அமர்ந்ததும் தெரிந்தது,
பேருந்து மாறி ஏறியது.

துள்ளிக் குதித்து விளையாடுகின்றன
கயிற்றில் கட்டப்பட்ட இரு ஆடுகள்.
கசாப்புக் கடைக்குப் பின்னால்.

***

களின் காதல் கடிதங்களைத்
தீயிட்டுக் கொளித்தினார் தந்தை.
சாதி அதில் குளிர் காய்ந்தது.

***

வள் இவளைப் பார்த்துப்
பொறாமைப் பட்டாள் கல்யாண வீட்டில்
கவரிங் நகையெனத் தெரியாமல்.

தீவிரவாத ரயில் குண்டு வெடிப்பில்
தூக்கியெறியப் பட்டபோது
இவைகள் சேர்ந்தன.

பல காலமாய் பிரிந்திருந்த
அந்த இரு தண்டவாளங்களும்

விவாகரத்துக் கோரி விண்ணப்பத்திருந்த
அந்தக் கணவன் மனைவி சடலங்களும்.

Friday, August 7, 2009

ன் திருமண அழைப்பிதழ்  தர
உன் இல்லம் வந்த போதுதான் 
உன் காதல் எனக்குப் புரிந்தது.
நீ தந்தத் தேநீர் 
சற்றே உப்பு கரித்திருந்தது. 

Thursday, August 6, 2009

தோல்விகள் கட்டியணைத்து
வெற்றிகள் எக்கி நின்று
எகத்தாளம் செய்தன முன்பு.
உன் வருகைக்குப் பின்
தோல்விகள் என்னிடம்
தோற்றுப் போய்விடுகின்றன.
வெற்றிகள் நிபந்தனை அற்ற
நிரந்தரக் கூட்டணி வைக்கின்றன.
நம்பிக்கையே!...
என்னுள் நீ வந்தமைக்கு நன்றி!

ந்த நால்வர் அணி
தலைவரை இரண்டு துண்டுகளாய்
உடைத்துச் சென்றது.
மீண்டும் தலைவரை
மற்றொரு இடத்தில்
கட்-அவுட் ஆக
சிரிக்க வைக்க.

Tuesday, August 4, 2009

கம் கடிக்கும் பழக்கத்திலிருந்து
என்னை மீட்க எண்ணி
உன் உதட்டுச் சாயத்தை
என் நகங்களில் பூசிவிட்டாய்.

கை சூப்பும் குழந்தையின் விரல்களில்
வேப்ப எண்ணை தடவி விடுவது போல்.

ஆனால்...???

நிழல் நண்பன்....



கல் முழுதும் என்னோடு
சுற்றித் திரியும் நண்பனவன்
இரவானதும் மறைந்து விடுகிறான்.
அவனுக்கும் மனைவியொருத்திக்
காத்திருப்பாள் போல।
* * * *

வெவ்வேறு வண்ணத்தில்
நான் ஆடை அணிந்தாலும்,
என் நிழலவனுக்கோ
எப்போதும் கருப்புச் சட்டை தான்.

தெரு முக்கில் உள்ள
பெரியார் சிலையை
நான் கடக்கும் போதெலாம்
சாஷ்டாங்கமாய் அவர் கால்களில்
விழுகிறான் எப்போதும்.

காத்திருப்பு


னக்காகக் காத்திருக்கும்,
ஒரு மணி நேரத்திற்குள்
நான்கைந்து அடிகள்
வளர்ந்து விட்டேன்.
மாலை நேர வெயிலில்,
என் நிழல் மூலம்.

மன அமைதி

பொருளாதாரச் சரிவு
ஆட்குறைப்பு
அலுவலகக் கெடுபுடி
தலை மேல் கத்தி,
எப்போதும்.
மருத்துவரின் மாத்திரையும்
சுவாமிஜியின் தியானமும்
தராத மன அமைதியை,
தொட்டிலில் தூங்கும்
என் குழந்தையின்
இரண்டு நிமிட கனவுச் சிரிப்பு
தந்து விடுகிறது.

ஆறாம் அறிவு

ரண் மேல் ஏறுவதாகட்டும்,
மரம் விட்டு மரம் தாவுவதாகட்டும்,
ஹாஸ்ய சேட்டைகள் செய்வதாகட்டும்,
கிராமத்துக் குழந்தைகள் யாவரும்
நம் மூதாதையரை நினைவூட்டி
டார்வினை மெய்ப்படுத்தவேச் செய்கின்றனர்.
பெரியவர்களான நாம்தாம்
சற்று அந்நியப்பட்டு விடுகிறோம்,
ஆறாம் அறிவால்.

Sunday, July 26, 2009

கூகுல்-க்கும் கூட
உன்னைப் பற்றித்
தெரிந்திருக்கிறது.
"தேவதை கவிதைகள்"
என்று தேடினால்
முதல் பத்து முடிவுகளும்
நான் உன்னைப் பற்றி
என் வலைப்பூவில் எழுதிய
பதிவுகளைச் சுட்டுகின்றது.

வர்கள்
கனவுகள் விதைத்து,
குருதியும் கண்ணீரும்
தெளித்து வளர்த்தனர்.
அக்கனவுகள்
நினைவுகளாய் பூத்து
கனியாகும் என்று.
ஆனால் இன்று
அவர்கள் அறுவடை செய்வதோ
மீண்டும் கனவு மூட்டைகளை.

ம் காதலைப் பகிர்ந்து
நாம் இருவரும் மீண்டும்
புதிதாய்ப் பிறந்த அந்நாளை
ஏன் நம் இருவருக்கும் பொதுவான
பிறந்த நாளாய்க் கொண்டாடக் கூடாது?

ம் பிரிதலின்
கடைசிச் சந்திப்பில்
ஈரமாயின
உதடுகளும், கண்களும்.

சபதம்

ன் பாதத்தைத் தொட்ட
அந்தக் கடல் அலையின்
கர்வக் கூச்சல் கண்டு,
மற்றொரு அலை சபதம் செய்தது.
தன் உயிர் விட்டு
வான் சென்று
மழைத் துளியாய்
பூமி வந்தாயினும்
ஒரு நாள்
உன் நெற்றியை முத்தமிடுமென்று.

Sunday, June 28, 2009

மன்னிப்பு வேண்டி நிற்கிறேன்...

திருடுவதே குற்றமெனும் போது,
களவாடப்படுவதே தெரியாமலிருக்கும்
உன்னிடமிருந்து கவர்வது
மிகப் பெரிய குற்றமே.

மன்னிப்பு வேண்டி நிற்கிறேன்.
உன்னிடமிருந்து
உனக்கே தெரியாமல்
சில கவிதைகள்
திருடியமைக்கு.
உன் கவிதை புத்தகத்திலிருந்து அல்ல.
உன் கண்களிலிருந்து.

இதுவும் திருட்டு தான்.
சற்று தாமதமானாலும்
புரிந்து கொண்டேன்
என் பிழையை.

மன்னித்து விடு.
மன்னித்து என்னை
கள்ளன் என்றாலும் சரி
கவிஞன் என்றாலும் சரி
கணவன் என்றாலும் சரி
ஏற்றுக் கொள்கிறேன்,
மனப்பூர்வமாய்.

Thursday, June 25, 2009

குறுஞ்செய்தி வாயிலாக ஒரு கதை

SMS

10.05 PM
இன்னுமா இன்ட்டர்வ்யூ முடியல? இப்ப எங்க இருக்கிற?

10.08
கொஞ்சம் நேரம் முன்னாடி தான் முடிஞ்சது... இப்ப சாப்டுட்டு இருக்கிறேன். பஸ் ஏறினதும் உனக்கு கால் பண்றேன்

10.09
'எப்படி பண்ணின இன்ட்டர்வ்யூ? பஸ் ஏறினதுக்கு அப்புறம் சொல்லு.

10.27
இன்ட்டர்வ்யூ நல்லா பண்ணியிருக்கிறேன்...பாக்கலாம். பஸ்-ல இடம் கிடச்சிருச்சு. இங்க படம் போட்ருக்காங்க.ரொம்ப சத்தமா இருக்கு. பேசினாலும் கேக்காது. அம்மா கிட்ட சொல்லிடு. நாளைக்குக் காலைல பாக்கலாம்.

10.29
சரி சொல்லிடறேன்... என்ன படம்? டேய் அண்ணா!பக்கத்துல எதும் அழகான பொண்ணு இருக்குதா?

10.33
ஆமா... பக்கத்துலயே ஒரு அழகான பொண்ணு. முன்னாடி இன்னொரு பொண்ணு. உனக்கு இதுல எந்த பொண்ணு அண்ணியா வேணும் சொல்லு? நாளைக்கு காலைல
வரும்போது கூட்டிட்டு வந்துடறேன். ஏதோ ஒரு சரத்குமார் படம். பேர்லாம் தெரியல.

10.35
உதை வாங்காம வீடு வந்து சேரு. போனா போகுது...கொஞ்சம் சைட் வேணா அடிச்சிக்கோ :)

10.39
நீ வேற.. நான் சும்மா சொன்னேன்டி.. இங்க பஸ்ல ஒரு பொண்னு கூட இல்ல.... கிழடுகட்டைங்களா இருக்கு :( ...படமும் புடிக்கல. போர் அடிக்குது.

10.42
அப்ப நல்லா படுத்துத் தூங்கு... சொல்ல மறந்திட்டேன். பாக்யம் சித்தி இன்னைக்கு வந்திருந்தாங்க. உனக்கு ஏதொ பொண்னு பாத்து வெச்சிருக்காங்களாம். உனக்கு
வேலை கிடைச்சதும் கல்யாணம் தானாம் :)!

10.45
ஆமா.. சித்திக்கு வேற வேலை இல்ல. இப்பலாம் பண்ணிக்க முடியாது. முதல்ல உன் கல்யாணம்டி... ஒரு இரண்டு வருஷத்துக்கு அப்புறம் தான் என்னோடது எல்லாம்.

10.47
நானும் இப்பலாம் பண்ணிக்க முடியாது...சரி வேலை கிடைச்சா முதல் சம்பளத்துல எனக்கு என்ன வாங்கித் தருவ?

10.53
ஹலோ...'என்ன வாங்கித் தருவ'ன கேட்டதும் சத்தத்தையே காணும்?

10.56
டேய்...தூங்கிட்டியா? ம்ம்...நாளைக்குப் பாக்கலாம். குட் நைட்....


11.00
(மற்றொரு பேருந்திலிருந்து யாரோ ஒருவர் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்புகிறார்)

'மச்சான் இங்க ஒரு பஸ் பள்ளத்துல கவுந்து கிடக்குடா. நிறைய கூட்டம் கூடியிருக்கு. ஆனா எங்க பஸ் நிறுத்தாம வந்துட்டான். எப்படியும் அஞ்சாறு பேராவது
காலியாயிருப்பாங்கடா'

Wednesday, June 24, 2009

தீர்ப்பு

என்னைப் பற்றிய
உன் கவிதைக்கும்,
உன்னைப் பற்றிய
என் கவிதைக்கும்,
சிறந்தது யாரென்ற
போட்டி வந்தது.

நம்மிடையேயான காதலையே
நடுவராய் ஏற்றனர் இருவரும்.
காதல் நடுவரோ கவிதைகள் படிக்க
அவகாசம் வேண்டுமென்று
மழை நாள் ஒன்றுக்குத்
தீர்ப்பைத் தள்ளி வைத்தார்.

தீர்ப்பு நாளும் வந்தது.
காதல் மன்றத்தில்
வாதியும் பிரதிவாதியும்
ஆவலாய் காத்திருக்க,
கம்பீர நடை பயின்று வந்தார்
காதல் நடுவர் அவர்கள்.
புன்னகையுடன் வாசித்தார் தீர்ப்பை...
கர்வம் பொங்க.

'இரு கட்சி கவிதைகளையும்
சாட்சியாய் கொண்டு வரும்
என் தீர்ப்பு யாதெனில்:
'இந்த எழுத்து கவிகளை விட
உணர்வு கவிதையான நானே,
அதாவது வாதி பிரதிவாதி
வியந்து பாடிய காதலே
சிறந்த கவிதை என்று தீர்ப்பளிக்கிறேன்!'

காதல் மன்றம் மகிழ்ச்சியில் பொங்க,
கூடியிருந்த காதலர்கள் ஆர்ப்பரிக்க,
உன் கவிதையும்
என் கவிதையும்
தலை தொங்கி வெளியேறியது.

Tuesday, June 23, 2009

முத்தம்

முத்தம் ஒன்று இட்டு விட்டு
வந்த திக்கில் சென்றுவிட்டாய்.
இட்ட சுவை பட்ட இடம்
உறைந்து போய் உள்ளது.
மல்லி மணம் காற்றில் சுற்றி
சித்தம் ஏறி பித்தம் கொளச் செய்கிறது.
உனக்கென்ன நீ அமைதியாய் இருப்பாய்...
புயல் சின்னம் என்னை அல்லவா
மையம் கொளச் செய்து விட்டாய்.

ஒரு கதை, இரு வேறு முடிவுகள்...

ராஜதுரை எம்.எல்.ஏ. அப்பொழுது தான் இரவு உணவிற்காக வீடு வந்திருந்தார். வந்தது தெரிந்தோ என்னவோ அவரது வீட்டு தொலைபேசி அலறியது . அழைப்பை எடுக்கச் சென்ற தன் மனைவியை சைகையால் அமர்த்திவிட்டு அவரே தொலைபேசி எடுத்தார்.

'ஹலோ....'

'.....' எதிர் முனையில் பதில் இல்லை.

'ஹலோ..யார்ங்க?'

கரகர குரலில் ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவரின் குரல் ஒலித்தது. 'நீ இது வரை பண்ணின அட்டூழியங்களுக்கு எல்லாம் பதில் சொல்ற காலம் வந்தாச்சு. இன்னும் இரண்டே நாள்ல உன் கதையை முடிக்கிறேன். சவால்... முடிஞ்சா உன்ன காப்பத்திக்கோ'.

தொலைபேசி துண்டிக்கப் பட்டது. ராஜதுரை ஒரு நிமிடம் சிலையாகிப் போனார். முகத்தின் திடீர் மாற்றம் கண்டு அவரது மனைவி குழம்பிப் போனார்.

'என்னங்க ஆச்சு? யார் ·போன்ல?'

'அ...அது ஒன்ணுமில்லை. ஏதோ ராங் கால்னு நினைக்கிறேன்'. இயல்பாக இருக்க முயன்று தோற்றுப் போனார்.

'ஏங்க நீங்க ரொம்பப் பதட்டப்படற மாதிரி தெரியுது. டாக்டர்ட்ட ஒரு நடை போய் பார்த்துட்டு வந்திடலாமா?'

'ஏய்...அதெலாம் வேண்டாம். ஒரு பிரச்சனையும் இல்ல. முதல்ல சாப்பாடு வையி'

மனைவியிடம் ஏதோ சமாளித்தாரே தவிர உள்ளே அவரது இதயம் சற்று அதிகமாகவே துடிக்க ஆரம்பித்தது. அந்தக் குரல் யாருடையதாய் இருக்கும் என்ற யோசனை ஒரு புறம். காவல் துறையிடம் இதைச் சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பம் மறுபுறம்... கடனே என்று மனைவி பரிமாரிய உணவை விழுங்க ஆரம்பித்தார்.

இக்கதையின் முடிவு இப்படி இருந்திருக்கலாம்

எங்கோ இருட்டில் இருவர்...

'டேய் என்னடா இப்படி செஞ்சிட்ட?'

'பின்ன என்னடா... எம்.எல்.ஏ ஆன இந்த நாலு வருஷத்துல நம்ம தொகுதிக்கு ஏதாவது செஞ்சிருப்பானா இந்த ஆளு? எப்படியும் பத்து இருபது கோடி சேத்திருப்பான். இப்ப என்னோட இந்த பொய்யால அவனுக்கு இன்னும் ரெண்டு நாள் சோறு தண்ணி இறங்காது... பயலுக்கு ஹார்ட் அட்டாக் வந்தாக் கூட ஆச்சர்ய படுறதுக்கில்ல... ஏதோ என்னால முடிஞ்சது ஒரு ரூபாய்ல'

'அவன் போலீஸ்கிட்ட போனா உன்ன கண்டுபிடிக்க மாட்டாங்களா?'

'மாட்டாங்கடா...இந்த ஒரு ரூபாய் காயின் ·போன வேணா கண்டுபிடிப்பாங்க. சரி நாம ரொம்ப நேரம் இங்க இருக்கக் கூடாது. கிளம்பலாம்'

இருட்டில் மறைந்தார்கள்.

இப்படியும் இருந்திருக்கலாம்...

'குட்டிமா! ·போன் கிட்ட இருந்து என்ன பண்ணிக்கிட்டிருக்க?' சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள் மரகதம், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஏதோவொரு தொடரின் சத்தத்தை மட்டும் கேட்டுக்கொண்டே.

அவளது மூன்று வயது குழந்தை பாபு, நல்ல பிள்ளையாக தொலைபேசியை வைத்துவிட்டு அம்மாவிடம் சென்றான்.

அவன் அம்மாவிற்கு தெரிந்திருக்க நியாயமில்லை...அவன் ஏதோ ஒரு எண்ணிற்கு அழைத்ததையும், தொலைபேசி வாயை தொலைக்காட்சி நோக்கி வைத்ததையும், அந்நேரம் தொடரின் நாயகன், வில்லனுக்கு சவால் விட்டதும்.

Monday, June 22, 2009

ஏக்கம்

கல்லூரி முடித்து வேலையின்றி,
கண்களில் குற்றவுணர்ச்சி தேக்கி
எவரேனும் எப்பணிக்கேனும்
அழைக்க மாட்டார்களாவென ஏங்கி,
சொந்த வீட்டிலோ உறவு வீட்டிலோ
அண்டிப் பிழைக்கும் நாட்களில்,
வைரமுத்து கூற்று போல்
காதலித்தால் மட்டுமல்ல,
வேலைக்கான காத்தலிலும்
தபால்காரன் தெய்வமாகிறான்.

ஒவ்வொரு நாளும்
அவன் தெருவைக் கடக்கையில்,
கண்களின் ஏக்கம்
துரத்திச் செல்லும் அவனை.
தீவிரபக்தன் சாமி ஊர்வலம்
பின்னோடுவது போல்.

என்றோ அவன் தரப்போகும்
அந்த நியமன உத்தரவிற்காக
காத்துக் கிடக்கும் மனது.
பிராசாதத்திற்கேங்கும்
கோயில் பிச்சைக்காரன் போல்.

Saturday, June 20, 2009

யாரேனும் சொல்லுங்களேன்...

எப்பொழுதும்
பழைய பாடல்களே விரும்பும் அவளிடம்,
புதுப்பாடல்கள் ஏதேனும்
கேட்கச் சொல்லுங்களேன்...

அவள் சாய்வு நாற்காலியில் உட்காரும் போது
எனக்கு சுகமாய் இருக்கும் என்பதையும்
அவள் வயிறு குலுங்கச் சிரிக்கும் போது
ஊஞ்சலாடுவது போலிருக்கும் என்பதையும்
சேர்த்தேச் சொல்லுங்கள்.

முடிந்தால்...
யாரேனும் அவளை
சாய்வு நாற்காலியில் உட்காரச் செய்து
புதுப்பாடல்கள் கேட்கச் செய்து
அதிகம் சிரிக்க வையுங்களேன்...

கருவறையிலிருந்து வெளி வந்தவுடன்
மறவாமல் நன்றி சொல்வேன் உங்களுக்கு!

Monday, June 15, 2009

ஆகாய மேடை

தோல்விகள் ஆசையாய் அணிவகுத்து
எனைத் தேடி வந்த
அந்நாளில்
ஆகாயத்தில் மேடையொன்று கட்டி
என் கனவுகளை அரங்கேற்றி மகிழ்ந்து
உற்சாகப் படுத்திய நீ
இன்று
என் கனவுகள் உயிர் பெற்று
பூமியில் அரங்கேறும் போது
ஆகாயத்தின் மேல் நின்று
கண்டு சிரிக்கிறாய்!

Saturday, May 30, 2009

வலைப்பூ ஆசை

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.... (http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html)

அந்த வெள்ளி இரவில், எனக்கு ஒரு விசித்திர மின்னஞ்சல் வந்திருந்தது.
அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால், நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்து விட்டு சுமார் 11.30 மணி அளவில் எனது லேப்-டாப் திறந்து போது அதைக் கண்டேன்.

வழக்கமான ஏதோ ஒரு குப்பை (spam) என்றே முதலில் அதை நினைத்தேன. அனுப்புநர் முகவரி சற்றே வித்தியாசமாய் இருக்க அதைப் படிக்க ஆரம்பித்தேன். அந்த அஞ்சல் என்னை எதையும் வாங்கச் சொல்லவில்லை, எவ்வாறு இணையத்தில் பொருள் ஈட்டலாம் என்ற வகுப்பும் இல்லை; எனது வங்கி எண்ணையும் கேட்கவில்லை. ஒரு ஆர்வத்தில் rajblogs@hell-heaven.net என்ற அந்த முகவரிக்கு வெறும் 'வணக்கம்' மட்டும் சொல்லி ஒரு பதில் அஞ்சல் செய்தேன். அப்படியொரு முகவரியே இல்லையென்று எனக்கு பதில் வந்துவிட்டது.

பொதுவாகவே 'இதை உங்கள் பத்து நண்பர்களுக்கு அனுப்பினால் உங்கள் வாழ்வு செழிக்கும் இல்லையேல் இரத்தம் கக்கி சாவீர்கள்' என்கிற ரீதியில் வரும் மின்னஞ்சல்களை நான் மதிப்பதில்ல. ஆனால் இந்த முறை ஏனோ அவ்வாறு இருக்க முடியவில்லை.

அந்த மின்னஞ்சலில் இருந்தது இதுவே:

“ வணக்கம் அன்பரே! எனது பெயர் ராஜசேகரன்.31 வயதான நான் திருமண முறிவிற்குப் பின் தனியாகவே உள்ளேன். உங்களைப் போலவே தினமும் ஒரு மணி நேரமாயினும் இணையத்தில் உலா போகாவிட்டால் எனக்கு அன்றைய தினம் முடியாது. எனது முக்கியமான பொழுதுபோக்கே வலைப்பதிவுகளைப் (blogs) படிப்பதுதான்.

டைப் அடிக்க தெரிந்தவனெலாம் வலைப்பூவும் இணையதளமும் ஆரம்பிக்க, எனக்கும் அந்த ஆசை துளிர் விட்டது. சிறுவயதிலிருந்தே ஓரளவு கதைகள் எழுத வருமாதலால் அதைக் கொண்டே எனது வலைப்பதிவை அலங்கரிக்க நினைத்தேன். கதையின் கருவை முடிவு செய்து விட்டு எழுத ஆரம்பிக்கும் போது ஊசி குத்தியது போல் ஒரு வலி என் மார்பில் ஆரம்பித்தது. பொறுத்துக் கொண்டு என் லேப்-டாப்பில் டைப் செய்ய ஆரம்பித்தேன். ஒரு வரி தான்... அதற்குள் கண்கள் இருட்ட ஆரம்பித்து சுயநினைவை இழக்க ஆரம்பித்தேன்....

மறு நாள் இரவு போலீசார் வந்து எனது பிரேதத்தைக் கொண்டு சென்றனர். கடைசி வரை என்னால் என் எழுத்துக்களை இணையத்தில் இணைக்க முடியாமலேயே போய்விட்டது. நீங்கள் எனது கதையை முடித்து இணையத்தில் சேர்ப்பீர்களா? எனது ஆசையை நிறைவேற்றுவீர்களா?

நான் எழுதிய அந்த ஒரு வரி இது தான்: ....”

அந்த மின்னஞ்சலில் கடைசியாக அந்த ராஜ் ஆரம்பித்த கதையின் ஆரம்ப வரியும், 'அன்புடன் ராஜ்' என்றும் இருந்தது.

காசா பணமா ஒரு கதை தானே, முயற்சி செய்து பார்க்கலாம். நன்றாக வந்தால் என் வலைப்பூவில் பதிவிடலாம் இல்லையேல் நல்ல பிள்ளையாக அதை அழித்து விட்டு வேறு வேலை பார்க்கப் போகலாம் என்றெண்ணி, அந்த ஓர் வரியிலிருந்து ஏதேனும் கதை எழுத வாய்ப்புள்ளதா என்று சிந்திக்க ஆரம்பித்தேன். சுமார் 20 நிமிட யோசித்தலில் ஒரு கரு பிடிபட்டது. தூங்கும் முன்னரே எழுதி முடித்துவிடலாம் என்று முடிவு செய்து மணியைப் பார்த்தேன். சரியாக 12.01.

சுவற்றில் சாய்ந்து கொண்டு டைப் செய்ய ஆரம்பித்தேன. முதல் வரியை அடிக்கும் போதே... ஊசி குத்தியது போல் ஒரு வலி என் மார்பில் ஆரம்பித்தது. சமாளித்துக் கொண்டு அடுத்த வரி அடிக்க முயன்றேன்... ஆனால்...கண்கள் இருட்ட ஆரம்பித்து சுயநினைவை மெல்ல இழக்க ஆரம்பித்தேன்.....மறு நாள் காலை போலீசார் வந்து எனது பிரேதத்தைக் கொண்டு சென்றனர்.

ராஜ் ஆசையை நிறைவேற்றலாம் என்ற என் ஆசையும் நிராசையாய்ப் போனது. கடைசி வரை அந்தக் கதையை முடித்து இணையத்தில் இணைக்க முடியாமலேயே போய்விட்டதே!

ப்ளீஸ்...உங்களில் யாரேனும் இதை முயற்சி செய்து எங்கள் ஆசையை நிறைவேற்றுவீர்களா? ஆங்...சொல்ல மறந்து விட்டேனே, அந்தக் கதையின் முதல் வரி இதுதான்:

"அந்த வெள்ளி இரவில், எனக்கு ஒரு விசித்திர மின்னஞ்சல் வந்திருந்தது."

அன்புடன்
சுரேஷ்

Monday, May 25, 2009

ஒரு வரி, இரு வரிக் கதைகள்

சில ஆண்டுகளுக்கு முன்னர் சுஜாதா அவர்கள் 'ஆனந்த விகடனில்' தமிழில் ஓரிரு வரிகளில் கதை சொல்லும் முறை பற்றி குறிப்பிட்டிருந்தார். அவை ஒரு முழு நீளக் கதை போல் உணர்வுகளை, காட்சிகளை வெளிப்படுத்தாவிடினும் ஒரு சிறு தாக்கத்தையேனும் ஏற்படுத்தக் கூடியது.அப்போது வாசகர்களுக்குப் போட்டிகள் கூட நடத்தினார்

 திகில், நகைச்சுவை போன்ற சில தலைப்புகளில் உதாரணங்கள் தந்திருந்தார். அவர் அது வரை படித்ததில் சிறந்தது என்று குறிப்பிடிருந்தது,

உலகின் கடைசி மனிதன் அறையினுள் இருக்க, கதவு தட்டப்பட்டது  

 

தலைப்பைத் தவிர்த்து, ஒன்று அல்லது இரு வரிகளில் கதை சொல்ல நானும் முயற்சி செய்தேன். அவற்றுள் சில இங்கே...:)

 

தலைப்பு: மனநல மருத்துவரின் குழப்பம்

'டாக்டர், இவன் தான் நான் கூட்டி வந்த பேஷண்ட்'.

'ஐயோ! பொய் சொல்றான் டாக்டர்.'

 

தலைப்பு: தீபாவளி

முன் வாசலில் பட்டாசு ராக்கெட் கொழுத்தி விட்டு வீட்டினுள் நுழைந்தோம்.

கொல்லைபுறம் வைக்கோல் போரில் பற்றி எரியும் தீயின் வெப்பம் தாங்காமல் அலறிக் கொண்டிருந்தது எங்கள் பசு.

 

தலைப்பு: 'நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்

 இறந்து போன தன் காதலி தந்த பிறந்த நாள் வாழ்த்து அட்டையைக் கலக்கத்துடன் பார்த்தார், மறு நாள் தன் நூறாவது பிறந்த நாள் விழா கொண்டாடப் போகும் பாலு தாத்தா.

  

ஓர் உயிரைக் கொடுத்து,  ஓர் உயிரின் அழிவிற்கு வித்திட்டான் லட்சுமியின் எய்ட்ஸ் கணவன். (தலைப்பின்றி)

Thursday, May 21, 2009

கவிதைத் திருட்டு

நான் கவிதை எழுதுவேனென
நண்பர்கள் சொன்னதை நம்பாமல்
என்னிடமே உன் ஐயம் பகர்ந்தாய்.
உனக்காக ஒரு கவிதை கேட்டாய்.

கால் மணி அவகாசம் கேட்டு
திரும்பி வந்து நான் தந்த
வண்ணத்தாள் சுற்றிய அப்பொருளைப்
புரியாமல் நீ பார்த்த ஒவ்வொரு நொடியும்
உன் ஒவ்வொரு கண் சிமிட்டலும்
ஓர் கவிதை வரியை
என்னுள் விதைத்துச் சென்றது.

விதைத்ததைப் பின்னர் வளர்க்கலாமென்று
நீ பிரிப்பதைப் பார்க்கலானேன்.

பிரித்த பின்னும் ஓரிரு நொடிகள்
புரியாமல் எனைப் பார்த்தாய்.
புரிந்த பின் மண் பார்த்தாய்.

உன் கையிலுள்ள பொருள் காட்டி
மெதுவாக உன் காதுகளில் சொன்னேன்
'இது தான் என் கவிதைப் புத்தகம்.
இதிலிருந்து சுட்டவையே
என் அனைத்துக் கவிதைகளும்'.

வெட்கம் கொஞ்சம் வீசிவிட்டு
உனக்கேதும் அதில் கவிதை தெரிகிறதா என்பதுபோல்
மீண்டும் பார்த்தாய்
நான் தந்த முகம் பார்க்கும் கண்ணாடியை!

Sunday, May 17, 2009

பரிகாசப் புன்னகை

எங்களூர் மேகமெலாம்
வருடத்தில் ஓரிரு முறை தான்
வியர்வை வழிய உழைக்கும்.
மீதி நாட்களில்
எங்கள் வியர்வை வழிவதை
மேல் நின்று பார்த்துப்
பரிகாசப் புன்னகை செய்யும்!

Thursday, May 7, 2009

முற்றும்.

நீ தந்து விட்டுப் போன

திருமண பத்திரிகையின்

அதிர்ச்சியில் இருந்து

சற்று மீட்சி பெற

வார இதழ்களைப் புரட்டினேன்.

எல்லா தொடர்கதைகளிலும்

'முற்றும்' கண்டேன்.

பிரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டு
இரண்டு திங்கள் ஆகவில்லை.
கட்டிய மாவிலை தோரணம் கூட
முழுதாய் உதிரவில்லை.
அதற்குள் பிரிந்துணர்வு ஒப்பந்தம் வேண்டி
நீதி மன்றம் சென்றதேன்?

Friday, May 1, 2009

கண்ணாடி

உன்னைப் பின்னமர்த்தி
என் இருசக்கர வாகனத்தில் செல்கையில்,
ஒரு பக்க கண்ணாடி பின்வரும்
வண்டிகள் நோக்கியும்
மற்றொரு கண்ணாடி பின் சாய்ந்து வரும்
உன்னை நோக்கியும் வைத்திருப்பேன்.
அப்போது மட்டும்
கண்ணாடியில் பொறிக்க பட்ட வாசகம்
மிகவும் அர்த்தப்படுவதாய்த் தோன்றும்!
'Objects in the mirror are closer than they appear'.

[காட்சிக் கவிதையாய் இதைக் காண்பித்த 'பொய் சொல்லப் போறோம்' படப்பாடலுக்கு நன்றி]

Tuesday, April 28, 2009

Inspiration from Vairamuthu's 'Duet' Lyrics

இமை பூட்டும் என் கருவிழியில் சிறைபட்டவளும் நீ தான்

இமை கிழித்து நீர் வழி வெளி வந்தவளும் நீ தான்


பெரும் ஓவியங்கள் தோற்றிடும் பேரழகும் நீ தான்

நெடுந் துயரதில் எனை ஆழ்த்தியவளும் நீ தான்

சங்கக் கவிகளை உயிர்த்தெழச் செய்தவளும் நீ தான்

சகமனிதர்களைப் புன்னகையால் கொன்றவளும் நீ தான்


பெண்ணின் இலக்கணம் வரைந்தவளும் நீ தான்

பிரிவின் வலி நெஞ்சில் குத்தியவளும் நீ தான்


உடல் தின்னும் தீயைச் சுட்டவளும் நீ தான்

உயிர் போக்கும் அமிலத்தைச் சுரந்தவளும் நீ தான்


காதலின் அரிச்சுவடி எனக்குத் தந்தவளும் நீ தான்

காலனின் வருகை வழி காட்டியவளும் நீ தான்


என் கவிதைக்குக் கருப்பொருளாய் இருந்தவளும் நீ தான்

என் கண்ணீரின் காரணியாய் இருப்பவளும் நீ தான்।


(An inspiration from Vairamuthu's 'Duet' Lyrics )

நான் | நீ | காதல்

நான் என்பது நீயாக

நீ என்பது நானாக

இருவரும் நாமானோம்.

பிறிதொரு ஊடலில்

நாம் என்பது நானாக

நீ என்பது நீயாகவேயிருக்க

நானோ இன்னும்

நீயாகவே உள்ளேன்!

வாழை நடும் வேளை

உன் கண்ணிரண்டு கொண்டு

நெருங்கினால் வாள் வீசுகிறாய்

மறுகிச் சென்றால் அம்பு தொடுக்கிறாய்।


கன்னியுன் போர் யுக்தியில்

சல்லியாய் நொருங்குகிறது மனம்.

சமாதானக் கொடி நீட்டுகிறேன்

சாகும் வரை உன்னடிமையென

சாசனம் தருகிறேன்.

வாளையும் வில்லையும் வீசிவிட்டு

உன் வீட்டில் வாழை நடச் செய்!

Monday, April 27, 2009

அவள் மனம் -2

அன்று பெய்த மழையின்

முன்னோட்டமாய் மின்னிய மின்னல்

உன் பெயரை வானில்

அச்சடித்துச் சென்றது என்றேன்!


உன் கவிதை பிரசுரித்த

பத்திரிகையின் பெயர் சொல்லி

கோயில் அர்ச்சனை செய்யலாமா

என்றென் ஐயம் பகர்ந்தேன்!


அலுவல் நிமித்தம் நீயெனைப் பிரிந்த

ஆறு நாட்களும் நான் வாங்கிய

புத்தகத்திலிருந்த பாம்பு உயிர்பெற்று

எனை மிரட்டியதையும்

புகைப்படத்திலிருந்த நீ உயிர்த்தெழுந்து

அதை விரட்டி எனைக் காத்ததையும்

சொன்னேன் என் தோழிகளிடம்!


இவற்றை

எழுத யத்தனிக்கும் பொழுதெலாம்

என் காகித ஓடையில்

என் பேனா விதைத்த வார்த்தை மீன் குஞ்சுகள்

நீந்த ஆரம்பித்து துள்ள ஆரம்பிக்கின்றன.

அதை ரசித்தபடியே கடலில் சேர்த்துவிடுகிறேன்!


சொற்களின் சேர்க்கை பிடிபடாததால்

உளறுகிறேன் என்றெண்ணி

அடைத்து விட்டார்கள்

மனநலக் காப்பகத்தில்।


இதையெலாம்

கவித்துவமாய் எழுதத் தெரிந்திருந்தால்

'கவிஞர்' பட்டம் தந்திருப்பார்களோ?

அவள் மனம் -1

உன்னோடு பின்னமர்ந்து

வண்டியில் செல்லும்போதோ

எனக்கான புடவையெடுக்க

கடையில் சுற்றும்போதோ

எனைச் சீண்டுவதற்காக நீ

சுட்டிக் காட்டும் அழகியப் பெண்களை

நான் பெரிதாக எடுத்ததில்லை।

'உனக்கு நானே அதிகம்' என்று

உன் வாயடைப்பேன்।

இருப்பினும்,

மனதின் ஏதோ ஒரு மூலையில்

பொறாமைத்தீ பற்றிக் கொள்வதைத்

தவிர்க்க முடியவில்லை!

கைப்பேசி

காற்றுக் குதிரையில்
அந்தி சாயும் வேளையில்
பவனி வரும்
உன் மெஸ்மரிஸ குரலில்
மிதக்கும் வர்ணனைகளைக்
கேட்பதற்காகவே வாங்கியிருக்கிறேன்
வானொலி வசதி கொண்ட
ஒரு புதிய கைப்பேசியை!

Saturday, January 10, 2009

சத்யா குடிச்சிருக்கியா?’

 

'ம்ம்...கொஞ்சம் தான் மது. ஒரு ரெண்டு சிப். அவ்ளோதான்'

 

மதுவிற்கு கோபம் தலைக்கேறியது. திருமணத்திற்கு முன்பே மதுவிடம் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது, "நட்சத்திர ஹோட்டலில் வேலையில் இருந்தாலும் சத்யா குடிப்பதில்லை, புகைப்பதில்லை" என்று.

 

மதுவின் கண்களை நேர் கொண்டு காண முடியவில்லை சத்யாவிற்கு.

 

'இல்லை மது... இன்னைக்கு ஒரு க்ளையண்ட் என்ன குடிக்கச் சொல்லி ரொம்ப வற்புறுத்தினார். நான் இப்போலாம் குடிப்பதில்லைனு எவ்வளவவோ சொல்லிப் பார்த்தேன்... அவர் கேட்கலை. வேற வழி இல்லாம கொஞ்சம் குடிச்சேன் அவ்ளோதான்'.

 

மதுவிற்கு கோபம் தணிந்ததாய்த் தெரியவில்லை. சத்யா தொடர்ந்து,

 

'புரிஞ்சிக்கோ மது.... நான் வேணும்னு குடிக்கல. இனிமே கண்டிப்பா குடிக்க மாட்டேன்....இது சத்தியம்'.

 

திருமணமான இந்த ஏழு மாதங்களில் சத்யா இந்த அளவு கலங்கி மது பார்த்ததில்லை.

 

சத்யா... நீ என்ன சமாதானம் சொன்னாலும் நீ செஞ்சது தப்புதான். நல்ல வேளை இன்னைக்கு அம்மா ஊர்ல இல்லை. மருமகள் குடிச்சிட்டு வீட்டுக்கு வர்ரது அவங்களுக்குத் தெரிஞ்சா எவ்வளவு கஷ்டப்படுவாங்க. இனிமேலாவது கவனமா இருந்துக்கோ'”

 

தலை அசைத்தவாறு உடை மாற்றச் சென்றாள் சத்யா என்ற சத்யப்பிரியா. அவளைப் புதிராய்ப் பார்த்தான் மது என்ற மது சூதனன்.

 

என்னை நீங்குவது

உன் உரிமையெனில்

என்னுள் உனை

நீக்கமறச் செய்வது

என் இருத்தலின் ஆதாரம்.

கனவுகளை நான்

தொலைத்துவிட்டதால்

நினைவுகளை விட்டு நான்

தொலைய நினைக்கிறேன்.

தும்மலுக்கு நன்றி.

தும்மலின் முடிவில்

அன்று நான்

அனிச்சையாய் கூறிய 'அம்மா',

நினைவூட்டியது எனக்கு

மறுநாள் அவளுடைய

பத்தாம் ஆண்டு திதி என்று.

 

தும்மிய பின் மெளனம் காக்கும்

என் பையனிடம்

''அம்மா' 'அப்பா' சொல்லிப் பழகு'

என்கிறேன் சில நாட்களாய்.

தும்மலுக்கு நன்றி.

Friday, January 2, 2009

கூசாமல் எழுதுகிறேன்

தொல்காப்பியம் தொட்டதில்லை

பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்

பள்ளிச் செய்யுளோடு சரி

கணக்குப் போட்டால் பத்தைத் தாண்டாது

நானறிந்த குறட்பா எண்ணிக்கை

பாரதியும் சரி அவன் தாசனும் சரி

நான்கைந்து வரிகள் அதிகபட்சம்

பாவகை தமிழில் பலவிருந்தும்

தேர்ச்சி ஒன்றிலும் இல்லை

இருப்பினும்...

கூசாமல் எழுதுகிறேன்

'புதுக்கவிதை' என்ற போர்வையில்

அதை வலைப்பதிவும் செய்கிறேன்

யாரென்ன செய்வரென்ற தைரியத்தில்.

மாயத்திரை

திறந்திருந்தால் உள்ளதையும்

மூடியிருந்தால் உள்ளத்தையும்

திரையிடுகிறது மூளையில்

இமையெனும் மாயத்திரை!

தங்கத் தட்டும் வெள்ளித் தட்டும்

மாறி மாறி மிதக்கின்றது

குளத்தில் சூரியனும் சந்திரனும்।

நீ விட்டெறிந்த கல்லால்
கலங்கியது முகம்
தண்ணீரில் என் பிம்பம்.

கனவுக் கோட்டை

முதல் மாத சம்பளத்தில்
கட்டிய கனவுக் கோட்டை
நொருங்கியது முழுவதுமாய்.
பேருந்தில் நானும்
என் கிழிந்த பையும்.

குற்றவுணர்ச்சி

ஒவ்வொரு முறையும்
மொட்டை மாடியிலிருந்து எக்கி
மாங்காய் பறித்து ருசித்தவுடன்
குற்றவுணர்ச்சி தொண்டையில் சிக்குகிறது
கிளை என் வீட்டிலும்
வேர் பக்கத்து வீட்டிலும்!

குறைத்துக் கொள்வோம்

நம் முத்தச் சத்தத்தைக்
குறைத்துக் கொள்வோம்
காமத்துப் பாலில் மேலும் சில பாக்கள் சேர்க்க
கல்லறையிலிருந்து உயிர்த்தெழப் போகிறான் வள்ளுவன்
நேற்றே வாத்ஸ்யாயனர் எழுத்தாணியோடு
ஓலை தேடி அலைந்ததாய் கேள்வி!