Thursday, July 24, 2008

ஏற்பாயா?



மலைப் பாதையின் வளைசாலைகளில்
ஒற்றை குடை பிடித்து சாரல் துளிகளைக்
குடையில் பாதியும் உடையில் மீதியும் தாங்கி
உந்தன் கைப்பிடித்து தோள் அணைத்து
நடந்து செல்ல ஆசை

வேலை நாளொன்றில் நீ எழுமுன் நானெழுந்து
சமையல் அத்தனையும் முடித்து தேனீர் கோப்பையுடன்
உனையெழுப்பி 'நான் உன்னைக் காதலிக்கின்றேன்!'
என்று சொல்ல ஆசை

தொலைக்காட்சி சப்தமில்லா
தொ(ல்)லைப்பேசி அலறலில்லா
மின்சாரமில்லா ஓரிரவில்
என்னுடன் நீ பேசும் வார்த்தைகளைக்
கோர்த்து கவிதையாய்த் தொடுக்க ஆசை

உன் பள்ளி கல்லூரி நாட்களில் நீ வரைந்த
ஓவியங்களை உன் தந்தையிடம் பெற்று
கண்ணாடிச் சாரங்களில் பாதுகாத்து
நம் வீட்டு வரவேற்பறையில் மாட்டி
உன் கண்கள் மிளிரும் கண்ணீரையும்
உன் உதடுகள் துளிர்க்கும் முத்தத்தையும்
உணர ஆசை

உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா?

1 comments:

இரசிகை said...

innum niraya aasaikalai add seiyunga..
nallaayirukku..