Friday, January 2, 2009

குற்றவுணர்ச்சி

ஒவ்வொரு முறையும்
மொட்டை மாடியிலிருந்து எக்கி
மாங்காய் பறித்து ருசித்தவுடன்
குற்றவுணர்ச்சி தொண்டையில் சிக்குகிறது
கிளை என் வீட்டிலும்
வேர் பக்கத்து வீட்டிலும்!

குறைத்துக் கொள்வோம்

நம் முத்தச் சத்தத்தைக்
குறைத்துக் கொள்வோம்
காமத்துப் பாலில் மேலும் சில பாக்கள் சேர்க்க
கல்லறையிலிருந்து உயிர்த்தெழப் போகிறான் வள்ளுவன்
நேற்றே வாத்ஸ்யாயனர் எழுத்தாணியோடு
ஓலை தேடி அலைந்ததாய் கேள்வி!

Wednesday, December 17, 2008

நான் மறப்பேனோ?

காவியங்களும் காப்பியங்களும்
போற்றிப் புகழ்ந்துரைத்த
காதலும், வீரமும், நட்பும்,
கற்பும், நாடும், மொழியும்,
ஏனைய பலவும் காலத்தின் ஓட்டத்தில்
மாறியிருக்கலாம், இலக்கணம் தவறியிருக்கலாம்।
ஆனால்...
ஆதியிலும் அந்தியிலும் வான்கடலில்
தினமும் அலங்கார ஓவியம் சமைத்திடும்
ஆதவன் போல் மாறாதிருப்பது,
சுயநலப் பேயின் நிழல் கூட அண்டாதிருப்பது,
பிரம்மனின் ஆக்கலையும் மாலின் காத்தலையும்
இப்புவிதனில் திறம்படச் செய்யும்
உனையும் எனையும் ஈன்றெடுத்தவரின் அன்பே...

உயிர் தந்த எந்தையும்
உயிர் காத்த அன்னையும்
பின் இவ்வுடல் வளர்க்க
அவ்விருவுடல் நலிந்த கதையும்
என்னுயிர் உடல் நீங்கினும்
நான் மறப்பேனோ?

Wednesday, December 10, 2008

கொக்கிகள்

விடுகதை ஒன்றைச் சொல்லிவிட்டு
விடைதரு முன்னே மாண்டுவிட்டாய்.
வீடுவாசல் துறந்து வீதி காடுகளில்
விடை தேடிப் பயணித்தேன்.

கானல் நீர் போல் தோன்றும் விடைகள்
நெருங்கிச் சென்றால் கரைந்து போகும்.
தேடுதல் என்னவோ விடைகளுக்காகத் தான்
கிடைத்ததோ மேலும் சில நூறு வினாக்கள்!

கேள்விக் கணைகள் கொக்கிகளாய் உடம்பைத் துளைக்க
சுமைதாங்கிக் கல்லில் என் பாரம் இறக்கினேன் ஓய்வுக்காக.
இதுவரை வந்தவர் யாவரும் கேள்விக் கொக்கிகளின்
இரணத்தால் இதோடு திரும்பியிருந்தனர்.

விடை தேடும் வேலையை மூட்டை கட்டலாமென்று
வந்த பாதை பார்த்தேன், ஆயிரம் காலடித்தடங்கள்.
எதிர்த்திசை நோக்கினேன், சுவடுகளில்லாமல் நீண்டிருந்தன.

விடுகதையின் விடை எங்கிருந்தோ எனை அழைக்க
பயணித்தேன் என் சுவடுகள் பதித்து.
கொக்கிகள் இப்பொழுது சுகமாய் இருந்தன!

கற்பனை வறட்சி....

சிந்தனைச் சுரங்கத்தில் ஓர் கவிதைக்கான

கருப்பொருளின் தேடலில் நான்.

நீண்டு வளைந்துச் சென்ற பாதைகள் எங்கும்

கற்பனை வறட்சியும் வறுமையுமே பிரதானமாய்.

அலைந்து களைத்து, தோல்வியுடன் வெளிவந்தேன்.


என் வீட்டு கொலுவிற்கு புடவையில் வந்த நீ

சிந்திய பார்வைகளும் சிதறிய புன்னகையும்

கொட்டிக் கொடுத்தன எனக்கு

பல நூறு கவிதைக்கான கருப்பொருளை!

நானும் ஏகலைவன் தான்

நானும் ஏகலைவன் தான்

தொலைவிலிருந்தே கவிதை புனைய

கற்றுக் கொண்டேன் உன்னிடமிருந்து.

கட்டை விரல் காணிக்கைக் கேட்காதே

மூன்று முடிச்சுகள் போடுவதில் சிரமமிருக்கும்!

உனக்காகவே துடிக்கும் என் இதயம்

வேண்டுமானால் கேள் தருகிறேன், மகிழ்வாய்.

ஓர் மாலையில்...

மண்ணோடு மழை சேர்ந்த

மகத்தான ஓர் மாலையில்

நம் கண்களின் சங்கமத்தில்

இடியும் மின்னலும் சாரலும்

அரங்கேறியது வெளியில் மட்டுமல்ல

என்னுள் என் மனதிற்குள்ளும் தான்!

ரீ-சார்ஜ்

அரசாங்கம் ஓர் உயர் மட்ட

விஞ்ஞானிகள் குழுவை அமைத்திருக்கிறதாம்...

ஆயிரம் கவலைகள் உள்ளவரையும் நொடியில்

ரீ-சார்ஜ் செய்யும் உந்தன் புன்னகை பற்றி ஆராய!

அடகுக்கடை...

பொய் எனும் நூலெடுத்து
பாசம் எனும் வலை விரித்து
தேன்சொல் எனும் வாளெடுத்து
பாவி மகள் காத்திருக்க
அடகுக்கடையில் அறிவை விட்டு
அலைபாய்ந்து வரும் வழியில்
நான் வந்து மாட்டிக்கொண்டேனே!

விளம்பர ஒப்பந்தம்


மின்னல் கொண்டு
புன்முறுவல் செய்யும்
அந்த வான் மகளை
ஏன் இது வரை
எந்த பற்பசை நிறுவனமும்
விளம்பர ஒப்பந்தம் செய்யவில்லை?

Wednesday, September 3, 2008

தமிழ்

முன் வாழ்ந்த நம் தமிழ் கூறிய முன்னவர்க்கு,

தன்னடக்கம் அதிகம் போலும்?!

அறுசுவையென அமர்க்களமாய்ப் பட்டியலிட்டவர்கள்

தீந்தமிழின் இனிய சுவையை விட்டுவிட்டார்கள்!

புலனுணர்ச்சியால் அறியப்படும் சிற்றின்பச் சுவையோடு

பேரின்பச் சுவையாகிய அமுதத் தமிழைச்

சேர்க்க மனமில்லையோ?

கடவுள்...

கல் என்று தெரிந்தே படைக்கும் மனிதன்
கண் முன் வரும் வறியோர்க்கு படைப்பதில்லை.
இவன் மனமன்றோ கல்!

ஒரு Trekking பயணத்தில்....

தித்திக்கும் காலைப் பொழுது
எத்திக்கும் பனிப் போர்வை
நுனிப் புல்லின் தூயத் துளி

தேகம் வருடும் மென்தென்றல்
சிலிர்க்க வைக்கும் குளிர்
இயந்திரத் தனமில்லா
இயற்கையின் சத்தங்கள்.
சத்தம் எனினும் இன்னிசை
எனின் மிக்கத் தகும்.
இந்த இனிய சுகந்தம்
நாளும் அனுபவிக்க...
ஆதவனோடு போட்டி போட்டு எழ
உறுதிமொழி பல எடுத்தும்
அலாரம் அடித்தும் போர்வையில் புதையும்
சோம்பேறித் தனமே இறுதியில் வெல்கிறது.
என் செய்வேன்? :(

பொறுப்பு

ஆறு சக்கரங்கள் அறுபது பேரை
அடைத்து அருகில் செல்ல
நான்கு சக்கரங்களுள் குளிரின்
அணைப்பிலுள்ள ஒருவர் பேசுகிறார்
அலைபேசியில் யாருடனோ
ஓசோன் ஓட்டை பற்றியும்
கரியமிழ வாயு பற்றியும்!

கடிதம்

எனக்கான உந்தன் கடிதத்தை
சட்டைப் பையில் வைத்து
பத்திரமாய் எடுத்து வந்தேன் என் அறைக்கு....
வழி நெடுக தேனீக்கள் மொய்த்தவாறு என்னை!
ஏன் இருக்காது? 'இப்படிக்கு' அடுத்து
உன் இதழ்களை அல்லவா பதித்திருக்கிறாய்...