Saturday, May 30, 2009

வலைப்பூ ஆசை

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.... (http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html)

அந்த வெள்ளி இரவில், எனக்கு ஒரு விசித்திர மின்னஞ்சல் வந்திருந்தது.
அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால், நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்து விட்டு சுமார் 11.30 மணி அளவில் எனது லேப்-டாப் திறந்து போது அதைக் கண்டேன்.

வழக்கமான ஏதோ ஒரு குப்பை (spam) என்றே முதலில் அதை நினைத்தேன. அனுப்புநர் முகவரி சற்றே வித்தியாசமாய் இருக்க அதைப் படிக்க ஆரம்பித்தேன். அந்த அஞ்சல் என்னை எதையும் வாங்கச் சொல்லவில்லை, எவ்வாறு இணையத்தில் பொருள் ஈட்டலாம் என்ற வகுப்பும் இல்லை; எனது வங்கி எண்ணையும் கேட்கவில்லை. ஒரு ஆர்வத்தில் rajblogs@hell-heaven.net என்ற அந்த முகவரிக்கு வெறும் 'வணக்கம்' மட்டும் சொல்லி ஒரு பதில் அஞ்சல் செய்தேன். அப்படியொரு முகவரியே இல்லையென்று எனக்கு பதில் வந்துவிட்டது.

பொதுவாகவே 'இதை உங்கள் பத்து நண்பர்களுக்கு அனுப்பினால் உங்கள் வாழ்வு செழிக்கும் இல்லையேல் இரத்தம் கக்கி சாவீர்கள்' என்கிற ரீதியில் வரும் மின்னஞ்சல்களை நான் மதிப்பதில்ல. ஆனால் இந்த முறை ஏனோ அவ்வாறு இருக்க முடியவில்லை.

அந்த மின்னஞ்சலில் இருந்தது இதுவே:

“ வணக்கம் அன்பரே! எனது பெயர் ராஜசேகரன்.31 வயதான நான் திருமண முறிவிற்குப் பின் தனியாகவே உள்ளேன். உங்களைப் போலவே தினமும் ஒரு மணி நேரமாயினும் இணையத்தில் உலா போகாவிட்டால் எனக்கு அன்றைய தினம் முடியாது. எனது முக்கியமான பொழுதுபோக்கே வலைப்பதிவுகளைப் (blogs) படிப்பதுதான்.

டைப் அடிக்க தெரிந்தவனெலாம் வலைப்பூவும் இணையதளமும் ஆரம்பிக்க, எனக்கும் அந்த ஆசை துளிர் விட்டது. சிறுவயதிலிருந்தே ஓரளவு கதைகள் எழுத வருமாதலால் அதைக் கொண்டே எனது வலைப்பதிவை அலங்கரிக்க நினைத்தேன். கதையின் கருவை முடிவு செய்து விட்டு எழுத ஆரம்பிக்கும் போது ஊசி குத்தியது போல் ஒரு வலி என் மார்பில் ஆரம்பித்தது. பொறுத்துக் கொண்டு என் லேப்-டாப்பில் டைப் செய்ய ஆரம்பித்தேன். ஒரு வரி தான்... அதற்குள் கண்கள் இருட்ட ஆரம்பித்து சுயநினைவை இழக்க ஆரம்பித்தேன்....

மறு நாள் இரவு போலீசார் வந்து எனது பிரேதத்தைக் கொண்டு சென்றனர். கடைசி வரை என்னால் என் எழுத்துக்களை இணையத்தில் இணைக்க முடியாமலேயே போய்விட்டது. நீங்கள் எனது கதையை முடித்து இணையத்தில் சேர்ப்பீர்களா? எனது ஆசையை நிறைவேற்றுவீர்களா?

நான் எழுதிய அந்த ஒரு வரி இது தான்: ....”

அந்த மின்னஞ்சலில் கடைசியாக அந்த ராஜ் ஆரம்பித்த கதையின் ஆரம்ப வரியும், 'அன்புடன் ராஜ்' என்றும் இருந்தது.

காசா பணமா ஒரு கதை தானே, முயற்சி செய்து பார்க்கலாம். நன்றாக வந்தால் என் வலைப்பூவில் பதிவிடலாம் இல்லையேல் நல்ல பிள்ளையாக அதை அழித்து விட்டு வேறு வேலை பார்க்கப் போகலாம் என்றெண்ணி, அந்த ஓர் வரியிலிருந்து ஏதேனும் கதை எழுத வாய்ப்புள்ளதா என்று சிந்திக்க ஆரம்பித்தேன். சுமார் 20 நிமிட யோசித்தலில் ஒரு கரு பிடிபட்டது. தூங்கும் முன்னரே எழுதி முடித்துவிடலாம் என்று முடிவு செய்து மணியைப் பார்த்தேன். சரியாக 12.01.

சுவற்றில் சாய்ந்து கொண்டு டைப் செய்ய ஆரம்பித்தேன. முதல் வரியை அடிக்கும் போதே... ஊசி குத்தியது போல் ஒரு வலி என் மார்பில் ஆரம்பித்தது. சமாளித்துக் கொண்டு அடுத்த வரி அடிக்க முயன்றேன்... ஆனால்...கண்கள் இருட்ட ஆரம்பித்து சுயநினைவை மெல்ல இழக்க ஆரம்பித்தேன்.....மறு நாள் காலை போலீசார் வந்து எனது பிரேதத்தைக் கொண்டு சென்றனர்.

ராஜ் ஆசையை நிறைவேற்றலாம் என்ற என் ஆசையும் நிராசையாய்ப் போனது. கடைசி வரை அந்தக் கதையை முடித்து இணையத்தில் இணைக்க முடியாமலேயே போய்விட்டதே!

ப்ளீஸ்...உங்களில் யாரேனும் இதை முயற்சி செய்து எங்கள் ஆசையை நிறைவேற்றுவீர்களா? ஆங்...சொல்ல மறந்து விட்டேனே, அந்தக் கதையின் முதல் வரி இதுதான்:

"அந்த வெள்ளி இரவில், எனக்கு ஒரு விசித்திர மின்னஞ்சல் வந்திருந்தது."

அன்புடன்
சுரேஷ்

2 comments:

ஒளியவன் said...

இப்பந்தான் தெரியுது உன் வலைப்பூவின் முகவரி ஏன் பாரடைஸ்ப்ளாஸம் என்று இருக்கிறதென்று. நான் என்னவோ நீ ஒரு மனிதன், நீ பூமியில் இருக்கிறாய் என்று நினைத்திருந்தேன், இப்பொழுதுதான் தெரிகிறது வெள்ளி இரவில் விசித்திர மின்னஞ்சலின் வழி பாரடைஸ் சென்று அங்கிருந்து எழுதிக் கொண்டிருக்கிறாய் என்று!!! அப்படியே இந்திரன் அல்லது எமதர்மனை விசாரித்ததாகச் சொல்லு!

மாசற்ற கொடி said...

A different story ! All the best.

Anbudan
Massattra Kodi