Thursday, May 21, 2009

கவிதைத் திருட்டு

நான் கவிதை எழுதுவேனென
நண்பர்கள் சொன்னதை நம்பாமல்
என்னிடமே உன் ஐயம் பகர்ந்தாய்.
உனக்காக ஒரு கவிதை கேட்டாய்.

கால் மணி அவகாசம் கேட்டு
திரும்பி வந்து நான் தந்த
வண்ணத்தாள் சுற்றிய அப்பொருளைப்
புரியாமல் நீ பார்த்த ஒவ்வொரு நொடியும்
உன் ஒவ்வொரு கண் சிமிட்டலும்
ஓர் கவிதை வரியை
என்னுள் விதைத்துச் சென்றது.

விதைத்ததைப் பின்னர் வளர்க்கலாமென்று
நீ பிரிப்பதைப் பார்க்கலானேன்.

பிரித்த பின்னும் ஓரிரு நொடிகள்
புரியாமல் எனைப் பார்த்தாய்.
புரிந்த பின் மண் பார்த்தாய்.

உன் கையிலுள்ள பொருள் காட்டி
மெதுவாக உன் காதுகளில் சொன்னேன்
'இது தான் என் கவிதைப் புத்தகம்.
இதிலிருந்து சுட்டவையே
என் அனைத்துக் கவிதைகளும்'.

வெட்கம் கொஞ்சம் வீசிவிட்டு
உனக்கேதும் அதில் கவிதை தெரிகிறதா என்பதுபோல்
மீண்டும் பார்த்தாய்
நான் தந்த முகம் பார்க்கும் கண்ணாடியை!

0 comments: