Tuesday, June 23, 2009

ஒரு கதை, இரு வேறு முடிவுகள்...

ராஜதுரை எம்.எல்.ஏ. அப்பொழுது தான் இரவு உணவிற்காக வீடு வந்திருந்தார். வந்தது தெரிந்தோ என்னவோ அவரது வீட்டு தொலைபேசி அலறியது . அழைப்பை எடுக்கச் சென்ற தன் மனைவியை சைகையால் அமர்த்திவிட்டு அவரே தொலைபேசி எடுத்தார்.

'ஹலோ....'

'.....' எதிர் முனையில் பதில் இல்லை.

'ஹலோ..யார்ங்க?'

கரகர குரலில் ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவரின் குரல் ஒலித்தது. 'நீ இது வரை பண்ணின அட்டூழியங்களுக்கு எல்லாம் பதில் சொல்ற காலம் வந்தாச்சு. இன்னும் இரண்டே நாள்ல உன் கதையை முடிக்கிறேன். சவால்... முடிஞ்சா உன்ன காப்பத்திக்கோ'.

தொலைபேசி துண்டிக்கப் பட்டது. ராஜதுரை ஒரு நிமிடம் சிலையாகிப் போனார். முகத்தின் திடீர் மாற்றம் கண்டு அவரது மனைவி குழம்பிப் போனார்.

'என்னங்க ஆச்சு? யார் ·போன்ல?'

'அ...அது ஒன்ணுமில்லை. ஏதோ ராங் கால்னு நினைக்கிறேன்'. இயல்பாக இருக்க முயன்று தோற்றுப் போனார்.

'ஏங்க நீங்க ரொம்பப் பதட்டப்படற மாதிரி தெரியுது. டாக்டர்ட்ட ஒரு நடை போய் பார்த்துட்டு வந்திடலாமா?'

'ஏய்...அதெலாம் வேண்டாம். ஒரு பிரச்சனையும் இல்ல. முதல்ல சாப்பாடு வையி'

மனைவியிடம் ஏதோ சமாளித்தாரே தவிர உள்ளே அவரது இதயம் சற்று அதிகமாகவே துடிக்க ஆரம்பித்தது. அந்தக் குரல் யாருடையதாய் இருக்கும் என்ற யோசனை ஒரு புறம். காவல் துறையிடம் இதைச் சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பம் மறுபுறம்... கடனே என்று மனைவி பரிமாரிய உணவை விழுங்க ஆரம்பித்தார்.

இக்கதையின் முடிவு இப்படி இருந்திருக்கலாம்

எங்கோ இருட்டில் இருவர்...

'டேய் என்னடா இப்படி செஞ்சிட்ட?'

'பின்ன என்னடா... எம்.எல்.ஏ ஆன இந்த நாலு வருஷத்துல நம்ம தொகுதிக்கு ஏதாவது செஞ்சிருப்பானா இந்த ஆளு? எப்படியும் பத்து இருபது கோடி சேத்திருப்பான். இப்ப என்னோட இந்த பொய்யால அவனுக்கு இன்னும் ரெண்டு நாள் சோறு தண்ணி இறங்காது... பயலுக்கு ஹார்ட் அட்டாக் வந்தாக் கூட ஆச்சர்ய படுறதுக்கில்ல... ஏதோ என்னால முடிஞ்சது ஒரு ரூபாய்ல'

'அவன் போலீஸ்கிட்ட போனா உன்ன கண்டுபிடிக்க மாட்டாங்களா?'

'மாட்டாங்கடா...இந்த ஒரு ரூபாய் காயின் ·போன வேணா கண்டுபிடிப்பாங்க. சரி நாம ரொம்ப நேரம் இங்க இருக்கக் கூடாது. கிளம்பலாம்'

இருட்டில் மறைந்தார்கள்.

இப்படியும் இருந்திருக்கலாம்...

'குட்டிமா! ·போன் கிட்ட இருந்து என்ன பண்ணிக்கிட்டிருக்க?' சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள் மரகதம், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஏதோவொரு தொடரின் சத்தத்தை மட்டும் கேட்டுக்கொண்டே.

அவளது மூன்று வயது குழந்தை பாபு, நல்ல பிள்ளையாக தொலைபேசியை வைத்துவிட்டு அம்மாவிடம் சென்றான்.

அவன் அம்மாவிற்கு தெரிந்திருக்க நியாயமில்லை...அவன் ஏதோ ஒரு எண்ணிற்கு அழைத்ததையும், தொலைபேசி வாயை தொலைக்காட்சி நோக்கி வைத்ததையும், அந்நேரம் தொடரின் நாயகன், வில்லனுக்கு சவால் விட்டதும்.

3 comments:

Unknown said...

நல்ல கதை. இரண்டாவது முடிவு அருமை. :)

Mercury Ball said...

மிக்க நன்றி நண்பா!

Nandhu said...

ukanthu yosipaya padips ...