Wednesday, June 24, 2009

தீர்ப்பு

என்னைப் பற்றிய
உன் கவிதைக்கும்,
உன்னைப் பற்றிய
என் கவிதைக்கும்,
சிறந்தது யாரென்ற
போட்டி வந்தது.

நம்மிடையேயான காதலையே
நடுவராய் ஏற்றனர் இருவரும்.
காதல் நடுவரோ கவிதைகள் படிக்க
அவகாசம் வேண்டுமென்று
மழை நாள் ஒன்றுக்குத்
தீர்ப்பைத் தள்ளி வைத்தார்.

தீர்ப்பு நாளும் வந்தது.
காதல் மன்றத்தில்
வாதியும் பிரதிவாதியும்
ஆவலாய் காத்திருக்க,
கம்பீர நடை பயின்று வந்தார்
காதல் நடுவர் அவர்கள்.
புன்னகையுடன் வாசித்தார் தீர்ப்பை...
கர்வம் பொங்க.

'இரு கட்சி கவிதைகளையும்
சாட்சியாய் கொண்டு வரும்
என் தீர்ப்பு யாதெனில்:
'இந்த எழுத்து கவிகளை விட
உணர்வு கவிதையான நானே,
அதாவது வாதி பிரதிவாதி
வியந்து பாடிய காதலே
சிறந்த கவிதை என்று தீர்ப்பளிக்கிறேன்!'

காதல் மன்றம் மகிழ்ச்சியில் பொங்க,
கூடியிருந்த காதலர்கள் ஆர்ப்பரிக்க,
உன் கவிதையும்
என் கவிதையும்
தலை தொங்கி வெளியேறியது.

0 comments: