Saturday, May 30, 2009

வலைப்பூ ஆசை

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.... (http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html)

அந்த வெள்ளி இரவில், எனக்கு ஒரு விசித்திர மின்னஞ்சல் வந்திருந்தது.
அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால், நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்து விட்டு சுமார் 11.30 மணி அளவில் எனது லேப்-டாப் திறந்து போது அதைக் கண்டேன்.

வழக்கமான ஏதோ ஒரு குப்பை (spam) என்றே முதலில் அதை நினைத்தேன. அனுப்புநர் முகவரி சற்றே வித்தியாசமாய் இருக்க அதைப் படிக்க ஆரம்பித்தேன். அந்த அஞ்சல் என்னை எதையும் வாங்கச் சொல்லவில்லை, எவ்வாறு இணையத்தில் பொருள் ஈட்டலாம் என்ற வகுப்பும் இல்லை; எனது வங்கி எண்ணையும் கேட்கவில்லை. ஒரு ஆர்வத்தில் rajblogs@hell-heaven.net என்ற அந்த முகவரிக்கு வெறும் 'வணக்கம்' மட்டும் சொல்லி ஒரு பதில் அஞ்சல் செய்தேன். அப்படியொரு முகவரியே இல்லையென்று எனக்கு பதில் வந்துவிட்டது.

பொதுவாகவே 'இதை உங்கள் பத்து நண்பர்களுக்கு அனுப்பினால் உங்கள் வாழ்வு செழிக்கும் இல்லையேல் இரத்தம் கக்கி சாவீர்கள்' என்கிற ரீதியில் வரும் மின்னஞ்சல்களை நான் மதிப்பதில்ல. ஆனால் இந்த முறை ஏனோ அவ்வாறு இருக்க முடியவில்லை.

அந்த மின்னஞ்சலில் இருந்தது இதுவே:

“ வணக்கம் அன்பரே! எனது பெயர் ராஜசேகரன்.31 வயதான நான் திருமண முறிவிற்குப் பின் தனியாகவே உள்ளேன். உங்களைப் போலவே தினமும் ஒரு மணி நேரமாயினும் இணையத்தில் உலா போகாவிட்டால் எனக்கு அன்றைய தினம் முடியாது. எனது முக்கியமான பொழுதுபோக்கே வலைப்பதிவுகளைப் (blogs) படிப்பதுதான்.

டைப் அடிக்க தெரிந்தவனெலாம் வலைப்பூவும் இணையதளமும் ஆரம்பிக்க, எனக்கும் அந்த ஆசை துளிர் விட்டது. சிறுவயதிலிருந்தே ஓரளவு கதைகள் எழுத வருமாதலால் அதைக் கொண்டே எனது வலைப்பதிவை அலங்கரிக்க நினைத்தேன். கதையின் கருவை முடிவு செய்து விட்டு எழுத ஆரம்பிக்கும் போது ஊசி குத்தியது போல் ஒரு வலி என் மார்பில் ஆரம்பித்தது. பொறுத்துக் கொண்டு என் லேப்-டாப்பில் டைப் செய்ய ஆரம்பித்தேன். ஒரு வரி தான்... அதற்குள் கண்கள் இருட்ட ஆரம்பித்து சுயநினைவை இழக்க ஆரம்பித்தேன்....

மறு நாள் இரவு போலீசார் வந்து எனது பிரேதத்தைக் கொண்டு சென்றனர். கடைசி வரை என்னால் என் எழுத்துக்களை இணையத்தில் இணைக்க முடியாமலேயே போய்விட்டது. நீங்கள் எனது கதையை முடித்து இணையத்தில் சேர்ப்பீர்களா? எனது ஆசையை நிறைவேற்றுவீர்களா?

நான் எழுதிய அந்த ஒரு வரி இது தான்: ....”

அந்த மின்னஞ்சலில் கடைசியாக அந்த ராஜ் ஆரம்பித்த கதையின் ஆரம்ப வரியும், 'அன்புடன் ராஜ்' என்றும் இருந்தது.

காசா பணமா ஒரு கதை தானே, முயற்சி செய்து பார்க்கலாம். நன்றாக வந்தால் என் வலைப்பூவில் பதிவிடலாம் இல்லையேல் நல்ல பிள்ளையாக அதை அழித்து விட்டு வேறு வேலை பார்க்கப் போகலாம் என்றெண்ணி, அந்த ஓர் வரியிலிருந்து ஏதேனும் கதை எழுத வாய்ப்புள்ளதா என்று சிந்திக்க ஆரம்பித்தேன். சுமார் 20 நிமிட யோசித்தலில் ஒரு கரு பிடிபட்டது. தூங்கும் முன்னரே எழுதி முடித்துவிடலாம் என்று முடிவு செய்து மணியைப் பார்த்தேன். சரியாக 12.01.

சுவற்றில் சாய்ந்து கொண்டு டைப் செய்ய ஆரம்பித்தேன. முதல் வரியை அடிக்கும் போதே... ஊசி குத்தியது போல் ஒரு வலி என் மார்பில் ஆரம்பித்தது. சமாளித்துக் கொண்டு அடுத்த வரி அடிக்க முயன்றேன்... ஆனால்...கண்கள் இருட்ட ஆரம்பித்து சுயநினைவை மெல்ல இழக்க ஆரம்பித்தேன்.....மறு நாள் காலை போலீசார் வந்து எனது பிரேதத்தைக் கொண்டு சென்றனர்.

ராஜ் ஆசையை நிறைவேற்றலாம் என்ற என் ஆசையும் நிராசையாய்ப் போனது. கடைசி வரை அந்தக் கதையை முடித்து இணையத்தில் இணைக்க முடியாமலேயே போய்விட்டதே!

ப்ளீஸ்...உங்களில் யாரேனும் இதை முயற்சி செய்து எங்கள் ஆசையை நிறைவேற்றுவீர்களா? ஆங்...சொல்ல மறந்து விட்டேனே, அந்தக் கதையின் முதல் வரி இதுதான்:

"அந்த வெள்ளி இரவில், எனக்கு ஒரு விசித்திர மின்னஞ்சல் வந்திருந்தது."

அன்புடன்
சுரேஷ்

Monday, May 25, 2009

ஒரு வரி, இரு வரிக் கதைகள்

சில ஆண்டுகளுக்கு முன்னர் சுஜாதா அவர்கள் 'ஆனந்த விகடனில்' தமிழில் ஓரிரு வரிகளில் கதை சொல்லும் முறை பற்றி குறிப்பிட்டிருந்தார். அவை ஒரு முழு நீளக் கதை போல் உணர்வுகளை, காட்சிகளை வெளிப்படுத்தாவிடினும் ஒரு சிறு தாக்கத்தையேனும் ஏற்படுத்தக் கூடியது.அப்போது வாசகர்களுக்குப் போட்டிகள் கூட நடத்தினார்

 திகில், நகைச்சுவை போன்ற சில தலைப்புகளில் உதாரணங்கள் தந்திருந்தார். அவர் அது வரை படித்ததில் சிறந்தது என்று குறிப்பிடிருந்தது,

உலகின் கடைசி மனிதன் அறையினுள் இருக்க, கதவு தட்டப்பட்டது  

 

தலைப்பைத் தவிர்த்து, ஒன்று அல்லது இரு வரிகளில் கதை சொல்ல நானும் முயற்சி செய்தேன். அவற்றுள் சில இங்கே...:)

 

தலைப்பு: மனநல மருத்துவரின் குழப்பம்

'டாக்டர், இவன் தான் நான் கூட்டி வந்த பேஷண்ட்'.

'ஐயோ! பொய் சொல்றான் டாக்டர்.'

 

தலைப்பு: தீபாவளி

முன் வாசலில் பட்டாசு ராக்கெட் கொழுத்தி விட்டு வீட்டினுள் நுழைந்தோம்.

கொல்லைபுறம் வைக்கோல் போரில் பற்றி எரியும் தீயின் வெப்பம் தாங்காமல் அலறிக் கொண்டிருந்தது எங்கள் பசு.

 

தலைப்பு: 'நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்

 இறந்து போன தன் காதலி தந்த பிறந்த நாள் வாழ்த்து அட்டையைக் கலக்கத்துடன் பார்த்தார், மறு நாள் தன் நூறாவது பிறந்த நாள் விழா கொண்டாடப் போகும் பாலு தாத்தா.

  

ஓர் உயிரைக் கொடுத்து,  ஓர் உயிரின் அழிவிற்கு வித்திட்டான் லட்சுமியின் எய்ட்ஸ் கணவன். (தலைப்பின்றி)

Thursday, May 21, 2009

கவிதைத் திருட்டு

நான் கவிதை எழுதுவேனென
நண்பர்கள் சொன்னதை நம்பாமல்
என்னிடமே உன் ஐயம் பகர்ந்தாய்.
உனக்காக ஒரு கவிதை கேட்டாய்.

கால் மணி அவகாசம் கேட்டு
திரும்பி வந்து நான் தந்த
வண்ணத்தாள் சுற்றிய அப்பொருளைப்
புரியாமல் நீ பார்த்த ஒவ்வொரு நொடியும்
உன் ஒவ்வொரு கண் சிமிட்டலும்
ஓர் கவிதை வரியை
என்னுள் விதைத்துச் சென்றது.

விதைத்ததைப் பின்னர் வளர்க்கலாமென்று
நீ பிரிப்பதைப் பார்க்கலானேன்.

பிரித்த பின்னும் ஓரிரு நொடிகள்
புரியாமல் எனைப் பார்த்தாய்.
புரிந்த பின் மண் பார்த்தாய்.

உன் கையிலுள்ள பொருள் காட்டி
மெதுவாக உன் காதுகளில் சொன்னேன்
'இது தான் என் கவிதைப் புத்தகம்.
இதிலிருந்து சுட்டவையே
என் அனைத்துக் கவிதைகளும்'.

வெட்கம் கொஞ்சம் வீசிவிட்டு
உனக்கேதும் அதில் கவிதை தெரிகிறதா என்பதுபோல்
மீண்டும் பார்த்தாய்
நான் தந்த முகம் பார்க்கும் கண்ணாடியை!

Sunday, May 17, 2009

பரிகாசப் புன்னகை

எங்களூர் மேகமெலாம்
வருடத்தில் ஓரிரு முறை தான்
வியர்வை வழிய உழைக்கும்.
மீதி நாட்களில்
எங்கள் வியர்வை வழிவதை
மேல் நின்று பார்த்துப்
பரிகாசப் புன்னகை செய்யும்!

Thursday, May 7, 2009

முற்றும்.

நீ தந்து விட்டுப் போன

திருமண பத்திரிகையின்

அதிர்ச்சியில் இருந்து

சற்று மீட்சி பெற

வார இதழ்களைப் புரட்டினேன்.

எல்லா தொடர்கதைகளிலும்

'முற்றும்' கண்டேன்.

பிரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டு
இரண்டு திங்கள் ஆகவில்லை.
கட்டிய மாவிலை தோரணம் கூட
முழுதாய் உதிரவில்லை.
அதற்குள் பிரிந்துணர்வு ஒப்பந்தம் வேண்டி
நீதி மன்றம் சென்றதேன்?

Friday, May 1, 2009

கண்ணாடி

உன்னைப் பின்னமர்த்தி
என் இருசக்கர வாகனத்தில் செல்கையில்,
ஒரு பக்க கண்ணாடி பின்வரும்
வண்டிகள் நோக்கியும்
மற்றொரு கண்ணாடி பின் சாய்ந்து வரும்
உன்னை நோக்கியும் வைத்திருப்பேன்.
அப்போது மட்டும்
கண்ணாடியில் பொறிக்க பட்ட வாசகம்
மிகவும் அர்த்தப்படுவதாய்த் தோன்றும்!
'Objects in the mirror are closer than they appear'.

[காட்சிக் கவிதையாய் இதைக் காண்பித்த 'பொய் சொல்லப் போறோம்' படப்பாடலுக்கு நன்றி]

Tuesday, April 28, 2009

Inspiration from Vairamuthu's 'Duet' Lyrics

இமை பூட்டும் என் கருவிழியில் சிறைபட்டவளும் நீ தான்

இமை கிழித்து நீர் வழி வெளி வந்தவளும் நீ தான்


பெரும் ஓவியங்கள் தோற்றிடும் பேரழகும் நீ தான்

நெடுந் துயரதில் எனை ஆழ்த்தியவளும் நீ தான்

சங்கக் கவிகளை உயிர்த்தெழச் செய்தவளும் நீ தான்

சகமனிதர்களைப் புன்னகையால் கொன்றவளும் நீ தான்


பெண்ணின் இலக்கணம் வரைந்தவளும் நீ தான்

பிரிவின் வலி நெஞ்சில் குத்தியவளும் நீ தான்


உடல் தின்னும் தீயைச் சுட்டவளும் நீ தான்

உயிர் போக்கும் அமிலத்தைச் சுரந்தவளும் நீ தான்


காதலின் அரிச்சுவடி எனக்குத் தந்தவளும் நீ தான்

காலனின் வருகை வழி காட்டியவளும் நீ தான்


என் கவிதைக்குக் கருப்பொருளாய் இருந்தவளும் நீ தான்

என் கண்ணீரின் காரணியாய் இருப்பவளும் நீ தான்।


(An inspiration from Vairamuthu's 'Duet' Lyrics )

நான் | நீ | காதல்

நான் என்பது நீயாக

நீ என்பது நானாக

இருவரும் நாமானோம்.

பிறிதொரு ஊடலில்

நாம் என்பது நானாக

நீ என்பது நீயாகவேயிருக்க

நானோ இன்னும்

நீயாகவே உள்ளேன்!

வாழை நடும் வேளை

உன் கண்ணிரண்டு கொண்டு

நெருங்கினால் வாள் வீசுகிறாய்

மறுகிச் சென்றால் அம்பு தொடுக்கிறாய்।


கன்னியுன் போர் யுக்தியில்

சல்லியாய் நொருங்குகிறது மனம்.

சமாதானக் கொடி நீட்டுகிறேன்

சாகும் வரை உன்னடிமையென

சாசனம் தருகிறேன்.

வாளையும் வில்லையும் வீசிவிட்டு

உன் வீட்டில் வாழை நடச் செய்!

Monday, April 27, 2009

அவள் மனம் -2

அன்று பெய்த மழையின்

முன்னோட்டமாய் மின்னிய மின்னல்

உன் பெயரை வானில்

அச்சடித்துச் சென்றது என்றேன்!


உன் கவிதை பிரசுரித்த

பத்திரிகையின் பெயர் சொல்லி

கோயில் அர்ச்சனை செய்யலாமா

என்றென் ஐயம் பகர்ந்தேன்!


அலுவல் நிமித்தம் நீயெனைப் பிரிந்த

ஆறு நாட்களும் நான் வாங்கிய

புத்தகத்திலிருந்த பாம்பு உயிர்பெற்று

எனை மிரட்டியதையும்

புகைப்படத்திலிருந்த நீ உயிர்த்தெழுந்து

அதை விரட்டி எனைக் காத்ததையும்

சொன்னேன் என் தோழிகளிடம்!


இவற்றை

எழுத யத்தனிக்கும் பொழுதெலாம்

என் காகித ஓடையில்

என் பேனா விதைத்த வார்த்தை மீன் குஞ்சுகள்

நீந்த ஆரம்பித்து துள்ள ஆரம்பிக்கின்றன.

அதை ரசித்தபடியே கடலில் சேர்த்துவிடுகிறேன்!


சொற்களின் சேர்க்கை பிடிபடாததால்

உளறுகிறேன் என்றெண்ணி

அடைத்து விட்டார்கள்

மனநலக் காப்பகத்தில்।


இதையெலாம்

கவித்துவமாய் எழுதத் தெரிந்திருந்தால்

'கவிஞர்' பட்டம் தந்திருப்பார்களோ?

அவள் மனம் -1

உன்னோடு பின்னமர்ந்து

வண்டியில் செல்லும்போதோ

எனக்கான புடவையெடுக்க

கடையில் சுற்றும்போதோ

எனைச் சீண்டுவதற்காக நீ

சுட்டிக் காட்டும் அழகியப் பெண்களை

நான் பெரிதாக எடுத்ததில்லை।

'உனக்கு நானே அதிகம்' என்று

உன் வாயடைப்பேன்।

இருப்பினும்,

மனதின் ஏதோ ஒரு மூலையில்

பொறாமைத்தீ பற்றிக் கொள்வதைத்

தவிர்க்க முடியவில்லை!

கைப்பேசி

காற்றுக் குதிரையில்
அந்தி சாயும் வேளையில்
பவனி வரும்
உன் மெஸ்மரிஸ குரலில்
மிதக்கும் வர்ணனைகளைக்
கேட்பதற்காகவே வாங்கியிருக்கிறேன்
வானொலி வசதி கொண்ட
ஒரு புதிய கைப்பேசியை!

Saturday, January 10, 2009

சத்யா குடிச்சிருக்கியா?’

 

'ம்ம்...கொஞ்சம் தான் மது. ஒரு ரெண்டு சிப். அவ்ளோதான்'

 

மதுவிற்கு கோபம் தலைக்கேறியது. திருமணத்திற்கு முன்பே மதுவிடம் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது, "நட்சத்திர ஹோட்டலில் வேலையில் இருந்தாலும் சத்யா குடிப்பதில்லை, புகைப்பதில்லை" என்று.

 

மதுவின் கண்களை நேர் கொண்டு காண முடியவில்லை சத்யாவிற்கு.

 

'இல்லை மது... இன்னைக்கு ஒரு க்ளையண்ட் என்ன குடிக்கச் சொல்லி ரொம்ப வற்புறுத்தினார். நான் இப்போலாம் குடிப்பதில்லைனு எவ்வளவவோ சொல்லிப் பார்த்தேன்... அவர் கேட்கலை. வேற வழி இல்லாம கொஞ்சம் குடிச்சேன் அவ்ளோதான்'.

 

மதுவிற்கு கோபம் தணிந்ததாய்த் தெரியவில்லை. சத்யா தொடர்ந்து,

 

'புரிஞ்சிக்கோ மது.... நான் வேணும்னு குடிக்கல. இனிமே கண்டிப்பா குடிக்க மாட்டேன்....இது சத்தியம்'.

 

திருமணமான இந்த ஏழு மாதங்களில் சத்யா இந்த அளவு கலங்கி மது பார்த்ததில்லை.

 

சத்யா... நீ என்ன சமாதானம் சொன்னாலும் நீ செஞ்சது தப்புதான். நல்ல வேளை இன்னைக்கு அம்மா ஊர்ல இல்லை. மருமகள் குடிச்சிட்டு வீட்டுக்கு வர்ரது அவங்களுக்குத் தெரிஞ்சா எவ்வளவு கஷ்டப்படுவாங்க. இனிமேலாவது கவனமா இருந்துக்கோ'”

 

தலை அசைத்தவாறு உடை மாற்றச் சென்றாள் சத்யா என்ற சத்யப்பிரியா. அவளைப் புதிராய்ப் பார்த்தான் மது என்ற மது சூதனன்.

 

என்னை நீங்குவது

உன் உரிமையெனில்

என்னுள் உனை

நீக்கமறச் செய்வது

என் இருத்தலின் ஆதாரம்.